சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Tuesday, January 30, 2007
போட்டோ ப்ளே (Photo Play)
'சார் உங்க நகைச்சுவைப் பேச்சை என்னுடைய பதிவில் எழுதியிருக்கிறேன்' என்று அல்லாபதி சுப்ரமணியத்திடம் சொன்னேன். ஏனோ டென்ஷனானார். 'சார் அது நான் சொந்தமாக எழுதினது இல்லை சார். அதை எழுதினது மல்லாடி வெங்கட கிருஷ்ண மூர்த்தி. பிரபலமான எழுத்தாளர். சிருங்காரம்.காம் நடத்தி வருகிறார். அவருடைய தளத்திலிருந்த போட்டோ ப்ளே தான் நான் பேசியதன் மூலக்கதை. எந்த கிரெடிட்டாக இருந்தாலும் அவருக்கே சென்று சேர வேண்டும். தயவு செஞ்சு எழுதிடுங்க..'

"சரி சார், நான் எழுதிவிடுகிறேன்."

***

'ஹல்லோ பாஸ்.. உங்களுக்கு சுப்ரமணியம் தெரியும்ல. அவரு ஏதோ சிருங்காரம், போட்டோ ப்ளே அப்படின்னு சொன்னாரு. அது என்ன போட்டோ ப்ளே?'

'அது ஒண்ணும் பெரிய விசயம் இல்லைங்க. நடிகர்களை வைத்து போட்டோ எடுத்து காமிக்ஸ் போல கதை சொல்லும் டெக்னிக். அவ்வளவுதான்'

மல்லாடி வெங்கட கிருஷண மூர்த்தியின் 'சிருங்காரம்' தளம் நிசமாகவே சிருங்கார மணம் வீசுகிறது.

"என்னங்க இது... ஏதாவது போர்னோ கிராபி தளமா? "

"இல்லை இல்லை... ஆனால் நிச்சயமாக குழந்தைகளுக்கான தளம் இல்லை."

- இதுதான் பதிலாகக் கிடைத்தது. ஒரு வார்த்தை கூடத் தெரியாத 'சுந்தரத்' தெலுங்கில் தளம் இருந்தாலும். நல்ல வேளையாக போட்டோ பிளே தளத்தினை ஆங்கிலத்தில் அமைத்திருக்கிறார் மல்லாடி.

அந்தக் கதை: http://www.photoplayz.com/forsale/

ஒரு முறை கட்டாயம் பார்க்கலாம்! ஜஸ்ட் 36 ஸ்லைடில் அழகாக கதையைச் சொல்லியிருக்கிறார். (முந்தானை சரிய விட்டு தாராளமாக போஸ் கொடுக்கிறார்கள்! இதைத்தான் 'ரொமாண்டிக் ப்ளே' என்று சொல்கிறார்கள் போலிருக்கிறது! :-))

Labels: , , , ,

posted by சாகரன் @ 1/30/2007 05:51:00 PM   1 comments
Monday, January 29, 2007
டாம் அண்ட் ஜெர்ரி! (Tom & Jerry)
"அப்பா நான் ஜெர்ரி நீ டாம் ஓ.கே?......... ஒ.கே! இப்ப வரை சொல்றேன்."

ரோஸ்கலர் சிலேட். எழுதவும் ஓரமாகத் தூக்கினால் எழுத்து மறைந்துவிடுவதுமான அமைப்பு. நான் 'டாம்' படத்தின் முகத்தினை வரைய ஆரம்பித்திருந்தேன்.

".. இங்கப் பாரு வர்ணிக்காக்கு இருக்கில்லோ அதே மாதிரி ஹேர் வரையணும், ஓ.கே? "

"டாம்க்கு ஏது முடி? நோ கிடையாது."

"ச்சூ. உண்டு. நீ போடலைனா நான் பேசமாட்டேன் போ. உனக்கு சாக்லேட் தரமாட்டேன்.... குடு. நான் வரையிரேன் பாரு. "

என்னிடமிருந்து சிலேட்டை பிடுங்கினாள். டாம் படத்தின் தலையில் இரண்டு நீளமானக் கோடுகள் வரைந்தாள். பின்னர் உடம்பினை வேகமாகக் கோடு இழுத்தாள். அது டாம் படத்தின் வயிற்றினைக் கிழித்தது போல இருந்தது. சட்டென்று சிலேட்டின் முனையைப் பிடித்து தூக்கினாள். டாம் அழிந்தது.

"இப்ப ஜெர்ரி போடலாம். நான் தான் வரைவேன் ஓ.கே"

அவளின் பிடிவாதம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டுதான் இருக்கிறது. இன்று அவள் பள்ளியில் 'வொய்ட் டே'! அதாவது வெள்ளை ட்ரெஸ் அணிந்துவர வேண்டுமென்பது கட்டாயம். இப்படி மாதத்திற்கு ஏதாவது ஒரு கலர் ட்ரெஸ் டே உண்டு. வெள்ளைகலரில் அவள் சைசுக்கு சரியாக ஒரு சட்டை இருந்தது. ஆனால் போட மாட்டேன் என்று ஒரே அடம். ஏன்? அது பாய்ஸ் ட்ரெஸ்ஸாம். மூன்றரை வயதில் இந்தக் குழந்தைகளுக்கு இருக்கும் அறிவும் பிடிவாதமும் ஆச்சரியமானது!

"இதோ பாருடா, இதெல்லாம் பாய்ஸ் ட்ரெஸ் கிடையாது. எல்லாரும் போடலாம். அம்மா கூட சட்டை வச்சிருக்கேன் பாரு " - அவளுடைய அம்மா எவ்வளவோ முயற்சி செய்தும் அழுது அடம் பிடித்துக்கொண்டிருந்தாள். கடைசியில் ஜெயித்ததும் அவள்தான். இன்று ஸ்கூலுக்கு மட்டம்!

*****

எங்களூரில் ஒரு நண்பர் இருந்தார். பெயர் ஞாபகம் இல்லை. இரண்டு மாதத்திற்கு ஒரு முறை முத்து முத்தான் கையெழுத்தில் அழகாக படம் வரைந்து போட்டோ ஒட்டி ஒரு கையெழுத்துப் பிரதி வரும். கருத்துக்கள் எழுதுவதற்காக கடைசி ஆறு பக்கங்கள் வெள்ளையாக விடப்பட்டிருக்கும். ஒரு முறை தன்னுடைய சுய சரிதத்தை தொடராக எழுதியிருந்ததைப் படித்தேன். நெட்டையனுடனும், காத்தமுத்துவுடனும் இணைந்து ஆத்தங்கரைத் தோட்டத்தில் ஏறிக்குதித்து தென்னையை பறித்து தின்றதும், அதில் மாட்டிக்கொண்டதும் என்பதாக சுவாரசியமாக(?) ரசித்து எழுதியிருந்தார். இன்றைய நிலையில் கண்டுகொள்ளாமல் விட்டிருப்பேன், ஆனால் அன்றோ எனக்கும் இது போன்ற பயணக்கட்டுரைகள் சுயபுராணங்களில் ஆர்வமிருந்தது. நிறைய படித்து கருத்து சொல்லும் வேகம் இருந்தது. பத்திரிக்கைகளுக்கு 15 பைசா போஸ்ட் கார்டில் விமர்சனம் அனுப்பும் பழக்கம் இருந்தது. அதனால் கடைசி பக்கத்தில், 'உங்கள் சுயசரிதை யாருக்கு என்ன பிரயோசனம்? உருப்படியாக ஏதேனும் எழுதுங்கள்!' என்பது போல ஏதோ எழுதிவிட்டு வந்துவிட்டேன்.

அடுத்த நாள் நான் யார் என்று விசாரித்திருக்கிறார் போலும். அடுத்த பிரதியில் தலைப்பு இப்படி வந்தது 'பிள்ளைத்தெரு கல்யாணராமனுக்கு பதில் மடல்' - இரண்டு பக்கங்களுக்கு, 'தான் ஏன் சுயசரிதை எழுதக்கூடாது? எந்த விதத்தில் தகுதி குறைந்துவிட்டது' என்று கேட்டு என்னென்னமோ எழுதியிருந்தார். காந்தி பூங்கா அருகில் என்னை சைக்கிளில் மடக்கி புத்தகத்தைக் கொடுத்து, படித்துவிட்டுத் திரும்பக் கொடுங்கள் என்று சொன்னார்.

அதற்குப் பிறகு நல்ல நண்பராகிவிட்டார். பார்க்கும் போதெல்லாம், தமிழரசியில் வந்து கொண்டிருந்த 'திருப்பூந்துருத்தி'யைப் பற்றியும், பொள்ளாச்சி நசன் குறித்தும், ஜெராக்ஸ் எடுத்து வெளிவரும் தனிச்சுற்று பத்திரிக்கைகளை பற்றியும் எங்கள் விவாதம் விரியும். பிற்காலத்தில் ஏதோ ஒரு பிரபல நாளிதழில் இணைந்துவிட்டதாகக் கேள்வி. கையெழுத்துப் பிரதி நடத்தும் பெரும்பாலான நண்பர்கள் ஊடகத்துறையில் தொடர்ந்து இருக்கத்தான் செய்கிறார்கள்.

*****

இந்தவாரத்தின் டோஸ்ட் மாஸ்டரில் நண்பர் அறவாழி அருமையான ஒரு சிறு பத்திரிக்கையை உருவாக்கியிருந்தார். அழகான லே அவுட். இதுதான் முதல் முறை இப்படி உருவாக்கியது என்று சொன்னது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதை விட இப்படி ஒன்றைச் செய்ய வேண்டுமானால் டெடிகேசன் மற்றும் ஆர்வம் இரண்டும் வேண்டும். வாழ்க!

*****

மக்கள் டிவி, தமிழன் டிவி, வின் டிவி - இந்த மூன்று சேனல்களும் இப்பொழுது சவுதியில் இலவசமாக வருகின்றன. இன்சாட் 2சி டைரக்ஷனில் ஆண்டெனாவைத் திருப்பி வைத்து ட்யூன் செய்தால் கூடவே கைரலி, ஏசியா நெட்,ஜீவன் டீவி ஆகிய மலையாளச் சேனல்களும் கிடைக்கின்றன.

இந்தத் தமிழ் டி.விகள் இன்னும் எனக்கு முழுமையாகப் பரிச்சயமாகவில்லை. மக்கள் டி.வியில் அடிக்கடி செய்திகள் ஒலிபரப்பாவதாகவும், தமிழன் மற்றுமொரு ஜல்லியாகவும், வின் - என்ன செய்கிறார்கள் என்பதே தெரியாத குழப்பமாகவும் இருப்பதாக இப்போதைக்குத் தோன்றுகிறது. அதே நேரத்தில் மலையாளச்சேனல்கள் இசைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஆச்சரியமாக இருக்கிறது. எந்த நேரம் திருப்பினாலும் ஏதாவது ஒரு சேனலில் யாராவது ஒரு பாடகரின் பாட்டோ பேட்டியோ ஓடிக்கொண்டிருக்கிறது!
posted by சாகரன் @ 1/29/2007 06:41:00 PM   4 comments
Saturday, January 27, 2007
எழுத்துக்கூடத்தின் 19வது சந்திப்பு - நகுலன் (Writer Nagulan)
நகுலனின் எழுத்தில் தோல்விதான் முக்கிய அனுபவம். நான் தோல்வி என்று குறிப்பிடுவது இலக்கிய தோல்வியை அல்ல. நகுலனின் அந்தரங்க தோல்வியும் அல்ல. சூழலை ஒரு நாடகமாக, ஏதோவொன்றை சுட்டி இன்னொன்றுக்கு காரணமாக்கும் வினோத தர்க்க முறையை ஒரு மனம் இயக்கமின்மையிலிருந்து உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது.

ஏனெனில்

'யாருமற்ற இடத்தில்

என்ன நடக்கிறது

எல்லாம் '

நான் இல்லாத இடம் யாருமற்ற இடம்தானே. அங்கு எல்லாமும் தானே நடக்கும். அந்த இடத்திற்கு நகுலனால் போக முடியாது. இதுதான் நகுலன் தரும் அனுபவம். நீங்களும் நானும் போகாத இடத்தில் என்ன நடக்கிறது. எல்லாம். இந்த இயல்புதான் நகுலனின் வசீகரம். - சங்கர ராம சுப்ரமணியன்
நன்றி : திண்ணை
~~*~~

தமிழில் கம்பன், திருத்தக்க தேவரிலிருந்து தான் ஓசை, சந்தம் கூடி வருகிறது. சங்கப் பாடல்களிலெல்லாம் இன்னர் ரிதம்தான் இருக்கிறது. இந்த இன்னர் ரிதம்தான் நகுலன், பிரமிளிடமும் இருக்கிறது.திரும்பத் திரும்ப இவர்களைச் சொல்லிக் கொண்டிருக்கக் காரணம், இவர்கள் கவிதைக் கட்டமைப்பிலும், விஷயத் தெரிவுகளிலும் சங்க மரபு சார்ந்து வருகிறார்கள். பழைய கவிதையாகயிருக்கிறது; அதே சமயத்தில் இன்றைய வாழ்க்கையை, இன்றையப் பிரச்சினைகளை, இன்றைய மனோபாவங்களை எடுத்துச் சொல்வதால் முழுக்க முழுக்க நவீன கவிதையாகவும் இருக்கிறது.
...........
ஒருவேளை கவிஞர் என்று சொன்னால் 'எழுத்து' அமைப்பில் நகுலன் ஒருவர்தான் கவிஞர். - கவிஞர் விக்ரமாதித்தன் - நன்றி: ஆறாம் திணை.
http://www.aaraamthinai.com/interview/2004/july10vikramathithyan.asp

“எழுத்து” காலகட்டம் பற்றி தெரிந்து கொள்ள...
http://thaaragai.wordpress.com/2006/05/05/pudhukkavithai2/

~~*~~


"என்னைப் பெற்றது நான்தான் "

நகுலனை சந்தித்த போது இதைச் சொல்லி அவரைப்படம் பிடித்துக் கொண்டிருந்த இயக்குனர் அருண்மொழியிடம் அதற்கு அர்த்தம் என்ன என்று கேட்டார். அருண் மொழி சொன்ன விளக்கம் அவருக்குத் திருப்தி தராதது போல பார்த்துக் கொண்டிருந்தார். நான்கு நாள் இடைவெளிக்குப் பின் "செவ்வகம்" ஆசிரியர் விஸ்வாமித்திரனுடன் சந்தித்தபோது நகுலன் விஸ்வாமித்திரனிடம் அதே கவிதையைச் சொல்லி இதற்கு அர்த்தம் என்ன என்றார். அவர் ஒருவனின் ஆளுமையும், வாழ்மனச் சூழலும் அவனின் வாசிப்பு, அவனைச்சுற்றி உள்ல்ளவர்களால் உருவாக்கப்படுவது பற்றிச் சொன்னார். நகுலன் ஓரளவு திருப்தி அடைந்தவர் போல் புன்னகைத்தார். அதைத் தொடர்ந்து அவர் கோள்விகளை கேட்டார். பெரும்பாலும் பதில்களாக அவை அமையாமல் கேள்விகளாகவே அமைந்திருந்தன. " இது ஒரு வகை ஜென் தன்மையானது கேட்கிற கேள்விகளுக்கு பதில்களை சொல்லாமல் அதனை ஒட்டி கேள்விகளை கேட்டுக்கொண்டிருப்பது " என்றார் விஸ்வாமித்திரன்.

2005ம் ஆண்டு வங்காளிகளின் படங்களை முன் வைத்து... - சுப்ரபாரதிமணியன் நன்றி: பதிவுகள்

~~*~~
நகுலன் தமிழ் நவீன எழுத்தின் முன்னோடிக் கவிஞர். கதையாசிரியர். திருவனந்தபுரத்தில் வாழ்ந்து கொண்டு வருகிறார். எண்பது வயது தாண்டிவிட்டது. சாகித்ய அகாதமி, ஞானபீடம் உள்ளிட்ட எந்தப் பரிசையும் பெறாதவர் என்பது அவரது தனிச்சிறப்பு. அவரது கதையுலகம் மிகவும் தனித்துவமானது . எட்டு வயதுப் பெண்குழந்தையும் நவீன மலையாளக்கவிதையும் என்றொரு சிறுகதை எழுதியிருக்கிறார். .......

நன்றி: எஸ்.ரா, அட்சரம்.

~~*~~

படிக்க ஒரு கட்டுரை : http://subramesh.blogspot.com/2005/05/blog-post_111624109063459058.html

~~*~~
புனைவு என்ற நிலையில் இயங்கும் மனம், தத்துவங்களை/அதுரீதியிலான ஒரு சாரத்தை எப்படிக் கையாள்கிறதென்று பார்க்கையில் ஜெயமோகன், சுந்தர ராமசாமி போன்றவர்களை ஒரு துருவத்தில் வைத்தால் நகுலன் போன்றவர்களின் எழுத்துக்கள் தானாக மறு துருவத்தில் பதிந்துகொண்டுவிடுகின்றன.

- சன்னாசி (http://dystocia.weblogs.us/archives/182 or MyDump)


எழுத்துக்கூடத்தின் 19ம் கூட்டம்: நகுலன் ஒரு அறிமுகம்.
- 26/01/2006

நீண்ட நாட்கள் கழித்துக் கூடும் கூட்டம் இது. சுமார் இரண்டு மாதங்கள் விடுப்பு முடித்து பெரும்பாலானவர்கள் பணிக்குத் திரும்பியிருந்தனராதலால் மீண்டும் ஒரு புது உத்வேகத்துடன் எழுத்துக்கூடக் கூட்டங்களைத் தொடரும் பொருட்டு இந்த வாரமே ஆரம்பிக்க முடிவு செய்திருந்தனர். குடியரசு தினம் - காலையில் இந்திய தூதரகத்தில் கொண்டாடப்பட்டதாகவும், கூட்டம் இந்த முறை அதிகமாக இருந்ததாகவும் கலந்து கொண்ட நண்பரொருவர் காதைக் கடித்தார்.

இந்த வாரக் கூட்டத்தில் வழக்கம் போல - எஸ்.ராவின் 'கதா விலாசம்' முதலில் எடுத்துக்கொள்ளப்பட்டது. நகுலன். எடுத்துப் பிரிக்கும் வரை நகுலன் பற்றி நான் அறிந்தது மிகக் குறைவு. வழக்கமாக அடுத்த வாரம் யார் என்பது முன்னரே தெரியும் என்பதால் கொஞ்சம் பிரிபரேசன் இருக்கும். அது இந்த வாரம் மிஸ்ஸிங்க்! நகுலனை எஸ்.ரா சந்தித்ததும், அதில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களும் ஆச்சரியத்தில் ஆழ்த்தின. அதன் பின்னர் இணையத்தில் வந்து செய்த சிறு ஆராய்ச்சிதான் மேலே பார்க்கும் சிறு கோட்டுகள். இணையத்தில் சிறு துழாவலிலேயே இவ்வளவு தூரம் எடுக்க முடிந்தது கொஞ்சம் பெரிய விசயம் தான். முந்தைய கதாவிலாசங்களில் படிந்த பெரும்பாலான எழுத்தாளர்கள் குறித்து என்னால் அதிகம் கண்டுபிடிக்க முடிந்ததில்லை:-(

"திருவனந்தபுரத்தில் அவரது வீடு, கௌடியார் என்ற பகுதியில் இருக்கிறது. நான் பார்க்கச் சென்ற நாட்களில், அவரது 'நாய்கள்' என்ற நாவல் வெளியாகியிருந்தது. 'நாய்களைப் பற்றி ஒருவர் நாவல் எழுதியிருக்கிறாரே!' என்று ஆச்சரியத்துடன் அதை வாசிக்கத் துவங்கினேன். நாவலில் ஓர் உருவகமாக, நாய் என்ற படிமத்தைப் பயன்படுத்தி இருந்தார்."


படிமம் - ? படிமம் என்றால்...? மாடல்? ப்ரோட்டோ டைப்?

நகுலன் திருமணம் செய்துகொள்ளாதவர். ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி, ஓய்வுபெற்று தனிமையில் வாழ்பவர். அவருக்குள்ள ஒரே துணை ஒரு பூனை மட்டும்தான்!

அவர் கட்டிலின் அருகில் வந்து, பூனை சுருண்டு படுத்துக்கொண்டது. அவர் பூனையைப் பார்த்தபடியே, ‘நான் என் பூனைக்குப் பெயரே வைக்கவில்லை. அது ஏதாவது ஃபீல் பண்ணுமா?’ என்று கேட்டார். எனக்கு எப்படிப் பதில் சொல்வது என்றே புரியவில்லை. நான் அமைதியாக, ‘பூனையை எப்படிக் கூப்பிடுவீர்கள்?’ என்று கேட்டேன். ‘பூனையைப் பூனை என்றுதான் கூப்பிடுவேன். அதுதானே சரியான முறை?’ என்றார்.
இந்த உரையாடலை வேற்று மனிதன் யாராவது கேட்டால், என்ன இது பிதற்றல்? என நினைப்பான். ஆனால், அதுதான் நகுலன்!

ஆழமான கேள்விகள். வயதானவர்கள் பலர் விதண்டாவாதம் செய்வதுண்டு. அதே போலத்தான் என்று தோன்றலாம். ஆனால் எஸ்.ரா சொல்கிறார்...

நகுலன் தன்னைத் தேடி வருபவர்களோடு கொள்ளும் உறவு விசித்திரமானது. சந்தித்த மறு நிமிடமே, ஒரு குழந்தையைப் போல ஏதேதோ கேட்கத் துவங்கிவிடுவார். அது ஒருவிதமான நட்பாக வளர்ந்து செல்லும். அவரது பரிகாசமும் ஒவ்வொன்றின் மீது அவர் எழுப்பும் கேள்விகளும் குழந்தைகளைப் போலவே விசித்திரமானதும் ஆழமானதும் ஆகும். உலகின் மீதான அவரது வியப்பும் ஈடுபாடும் தர்க்கங்களை மீறியது.

~~*~~

திரும்பவும் மாலையில் நான் சென்றபோது, காலையில் கேட்ட கேள்விகளையே மறுபடி கேட்டார்.
‘நீங்கதானே ராமகிருஷ்ணன்?’
‘ஆமாம்!’
‘அப்போ, காலையில் 'ராமகிருஷ் ணன்' னு ஒருத்தர் வந்திருந்தாரே, அவர் உங்களுக்குத் தெரிந்தவரா?’ ‘ஓரளவுக்குத் தெரியும்’ என்றேன். நகுலனின் சிரிப்பு பீறிட்டது. ‘அப்போது அவரிடம் பேசிக்கொண்டு இருந்ததை உங்களிடமும் பேசலாம், இல்லையா?' என்று கேட்டார். உரையாடலைத் தத்துவத்தின் உயர்ந்த நிலைகளை நோக்கி நகர்த்திப் போகும் கலை அவருக்கே உரியது.
ஒரு நாள் முழுவதும் நகுலனோடு இருந்தேன். மாலை, நானும் அவரும் திருவனந்தபுரம் சாலையில் நடந்து சென்றோம். அவர் அழகான இளம்பெண் ஒருத்தியைக் காட்டி, 'இவள் அழகாக இருக்கிறாளா?' என்று கேட்டார். மிக அழகாக இருப்பதாகச் சொன்னேன். அவர், 'கண்ணில் பார்த்தாலே அழகு தெரிந்துவிடுகிறது, இல்லையா? அது எப்படி சார்?' என்று கேட்டார். என்ன சொல்வதென்றே தெரியவில்லை.


அடேங்கப்பா.. நிஜமாகவே இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்ல முடியும்?! ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் அழகு என்று சொல்ல எப்படி முடிகிறது?!!

ஒரு முறை நகுலன் தன் வீட்டின் வாசலில் உட்கார்ந்தபடி, சாலையில் போகிறவர்களுக்குக் கையசைத்துக்கொண்டு இருந்தார். பள்ளிச் சிறுவர்கள் சிலர் கையசைத்துப் போனார்கள். அவர் கையசைத்தபடியே என்னிடம் கேட்டார்...
‘நான் இறந்துபோன பிறகு, இந்த வீட்டில் கை காட்டும் கிழவன் ஒருவன் இருந்தான் என்று குழந்தைகள் நினைப் பார்கள், இல்லையா? அதற்குத்தான் கையசைக்கிறேன்’ என்றார். இந்த ஆதங்கத்தின் கீழ் இருந்த துக்கம், ஒரு தேளின் விஷக்கடுப்பைப் போல என் உடலெங்கும் தாக்கியது.

இதைப் படிக்கும் போது எழுத்துக்கூடத்தில் இருந்த நண்பர்கள் அனைவரும் கிட்டத்தட்ட இந்த உணர்ச்சியைப் பெற்றிருப்பார்கள் என்று நம்புகிறேன். தன்னை வெளிப்படுத்தத் துடிக்கும் இயல்பு உலகில் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. இலக்கியம், படைப்பு அனைத்துமே தன்னை கால காலத்திற்கும் நிலை நிறுத்திக்கொள்ளத் துடிக்கும் துடிப்புதான். 'தேடிச் சோறு தின்று... ' பாரதியை ஏனோ நினைவு கூர்ந்தார் நண்பரொருவர்.

சில வாரங்களுக்கு முன் வந்த விகடன் கட்டுரையை நினைவுகூர்ந்தார் வேறொருவர்.

‘‘நான் இறந்த பிறகு எனக்கு அஞ்சலிக் கூட்டங்கள் நடத்த வேண்டாம். ஏனென்றால், என்னால் வர முடியாது!’’ (விகடன் or உமாசரண்)


எஸ்.ரா எழுத்தார்வலர்களுக்கு முத்தாய்ப்பாக ஒன்றைச் சொல்கிறார்:

"பெரிய கத்தியைத் தேர்ந்தெடுக்கிறாயா, இல்லை, சிறிய கத்தியைத் தேர்ந்தெடுக்கிறாயா என்பது முக்கியம் இல்லை. எதிரியின் இதயத்துக்கும் உன் கத்தி முனைக்கும் உள்ள இடைவெளி எவ்வளவு இருக்கிறது என்பதுதான் முக்கியம்" என்று யுத்த சாஸ்திரம் கூறுகிறது. அந்த நூலை எழுதியவன் ஒரு பௌத்த பிக்கு. ஒருவகை யில் இதுதான் எழுத்தின் ரகசியம். இதைக் கற்றுத் தருபவன், கதையை எழுதியவன் இல்லை. மாறாக, ஒரு நாடோடி. கற்றுக் கொள்வதற்கு ஆசானை விடவும் மனம்தான் முக்கியமாகத் தேவைப்படுகிறது. மனதைக் குழந்தையைப் போல வைத்துக்கொள்வது எளிதானதா என்ன?

முழுமையான எஸ்.ரா.வின் கதாவிலாசம் கட்டுரையைப் படிக்க:
http://www.vikatan.com/av/2005/may/22052005/av0602.asp (or) http://e-arc.blogspot.com/2005/06/blog-post_111997277395514514.html

***********

நகுலன் கவிதைகள் குறித்தான சில அலசல்கள் நண்பர்களால் முன் வைக்கப்பட்டன. அவரது கவிதைகள் தரும் தத்துவ விசாரங்கள் குறித்த பகிர்வு தொடர்ந்தது. சின்னச் சின்ன வரிகளில் எத்துணை ஆழம். கூடிய சீக்கிரம் நகுலன் புத்தகங்கள் வாங்கி வரச் செய்து ரியாத் தமிழ்ச்சங்கம் "அறிவுக்கூடம்" மூலமாக படிக்க வழி வகை செய்தால் நன்றாக இருக்கும்! :-)


இதன் தொடர்ச்சியாக "தமிழில் தாக்கம் ஏற்படுத்திய தலைசிறந்த பத்து தமிழர்கள்." வரிசையில் சங்க இலக்கியம் குறித்த சுமார் 20 நிமிடச் சொற்பொழிவு டாக்டர். மாசிலாமணி ஐயா அவர்களால் நிகழ்த்தப்பட்டது. முதல் தமிழராகத் "தொல்காப்பியர்" குறித்து சென்ற முறை பேசியிருந்தார். இந்த முறை அவர் பேசிய அனைத்தையும் ஓரளவுக்கு குறிப்பெடுத்தேன். இந்தக் குறிப்புகளை கூடிய விரைவில் ஒரு தனிக்கட்டுரையாகப் பதிக்க வேணும்! [வழக்கமாக எழுத்துக்கூட சந்திப்புகளைப் பதிவு செய்யும் கவிஞர்கள் இருவரும் கதாவிலாசம் பார்ட் முடிந்தவுடனேயே அடுத்த வாரம் நடக்க இருக்கும் பட்டிமன்றத்திற்காக எஸ்கேப்பாயிபதே ஆகியிருந்தார்கள்! :-)]

******

என்னத்தான் இருந்தாலும், பழசினை எழுதுவது அவ்வளவு சுவாரசியமானது இல்லையே! ஏற்கனவே நடந்த கூட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்ள 'ரியாத் தமிழ்ச்சங்கத்தின் எழுத்துக்கூடம்' தளத்தினைப் பாருங்கள்.


******

அடுத்த வார எழுத்துக்கூடம்: 2ம் தேதி வெள்ளிக்கிழமை. தெரிந்து கொள்ளப்பட இருக்கும் எழுத்தாளர்: ஜி.நாகராஜன்
posted by சாகரன் @ 1/27/2007 08:07:00 PM   2 comments
Thursday, January 25, 2007
Why N73 is better than K800
சோனி எரிக்சன் கே. 800 ம் சரி, நோக்கியா என். 73 ம் சரி இரண்டுமே மிகச் சிறப்பான மாடல்கள். இவற்றைக் குறித்த ஒரு ஒப்பீடு.







Sony Ericsson K800 Nokia N73
3.2 மெகா பிக்ஸல் சைபர்ஷாட் கேமரா வித் பிளாஷ் 3.2 மெ.பி கார்ல் சூயிஸ் லென்ஸ் கேமரா வித் பிளாஷ்
1000 போன் புக் அள்வில்லை
3G சப்போர்ட் ஆம்
ஜாவா, எப்.எம் ரேடியோ, எம்.பி.3 பிளேயர் ஆம்
பேச்சு மெமோ, டயல், ஹான்ஸ்ப்ரீ(Loud Speaker) அதே!
விபரங்கள் விபரங்கள்


இப்படி இரண்டும் ஒன்றுக்கொன்று ஒரே விதத்தில் இருந்தால், அப்புறம் என்ன வித்தியாசம்? ரொம்ப முக்கியமாக சில விசயங்கள் இருக்கின்றன! அவற்றைப் பற்றி கொஞ்சம் பார்க்கலாம்...

பேட்டரி - ரொம்ப முக்கியமான விசயம். பாதி போன் பேசும்போது, பேட்டரி இல்லாம திண்டாடியிருக்கிறீர்களா? நம்மில் பலருக்கு அடிக்கடி நடப்பதுதான் இது. எனவே திறனுள்ள பேட்டரியை கவனிக்க வேண்டியது அவசியமாகிறது. சோனி எர்க்ஸன் - லித்தியம் பேட்டரி - 900 mAh, அதே நேரத்தில் நோக்கியா 1100 mAh. இருப்பதிலேயே அதிக திறனுள்ள பேட்டரியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்.73 யில்.

போன் மென்பொருள்: சோனி எரிக்ஸன் - ப்ரொபரைட்டரி போன் சாப்ட்வேர். அதாவது போனினுடைய செயல்பாட்டினை அதிகரிக்க முடியாது. நோக்கியா - சிம்பயான் ஆப்பரேட்டிங் சிஸ்டம்(Symbian Operating System). மென்பொருட்களை நிறுவுவதன் மூலம் நீங்கள் போனை எப்படி வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். இது கிட்டத்தட்ட் ஒரு மினி கம்ப்யூட்டர். இதன் குறை, ஒரு வேளை தவறான மென்பொருளை நிறுவுவதன் மூலம் தொலைபேசியை தொல்லைக்குட்படுத்த முடியும். உதா: வைரஸ் போல. சில வருடங்கள் உபயோகத்திற்குப் பிறகு போனின் திறன் குறையக்கூடும். (என்னுடைய முந்தைய 6600 ஒன்றரை வருட உபயோகத்திற்குப் பிறகு ஒலியின் அளவு குறையத் துவங்கி விட்டது.)

காமராவைப் பற்றி: ரொம்ப முக்கியமாக - சோனி எரிக்ஸன் - முழுமையான 3.2 எம்.பி. சைபர் ஷாட் கேமராவிற்குரிய அனைத்து திறனையும் கொண்டுள்ளது. ஆனால். க்வாலிட்டி? பெரும்பாலான போட்டோக்கள் அதிக வெளிர்ப்புடன் வருகின்றன. எக்ஸ்போசர், வொயிட் பேலன்ஸ் முதலியவை சரி செய்ய மிகவும் பிரயத்னப்பட வேண்டியிருக்கிறது. பிளாஷ் - இதன் பெரிய ப்ளஸ். நீண்ட தூரம் வரை பாய்கிறது. அதே சமய்த்தில் மைனஸ் பாயிண்டும் இதே. அருகிலுள்ள இடத்திற்குக் கூட அதிக அளவில் ஒளியைப் பாய்ச்சி, படத்தினை சரியாகத் தெரியாமல் செய்கிறது.

நோக்கியா - போட்டோ குவாலிட்டி அருமை. ஆட்டோ போகஸ், லென்ஸின் (Carl Zeiss) துல்லியம் . இவை சிறப்பாக இருக்கின்றன. எல்லாவற்றையும் விட, அந்த பெரிய திரை(ஸ்கிரீன்)யில் பார்க்க மிக நன்றாக இருக்கிறது.

~~~~~~~~~~~
பெட்டிச் செய்தி:

சோனி எர்க்ஸன் - பிளாகருடன் கை கோர்த்துக்கொண்டு, 'பிக்சர் பிளாகிங்' சேவை தந்திருக்கிறார்கள். 'ஜஸ்ட் லைக் தட்' ஒரு போட்டோ எடுத்து, 'பிளாக் திஸ் (Blog this)' என்று சொன்னாலே போதும். ரைட் ராயலாக உங்கள் வலைப்பதிவில் வந்து உட்கார்ந்துவிடும். சமீபத்தில் டோஸ்ட் மாஸ்டர் மீட்டிங்கில் நான் வலைப்பதிவு பற்றி ஒரு பிரசண்டேஷன் கொடுக்கும் போது, இந்த போனை உபயோகித்து டோஸ்ட் மாஸ்டர் மீட்டிங் போட்டோவினை வலையில் இட்டுக் காட்டினேன். குறை: போட்டோவின் குவாலிட்டி மிக மிகக் குறைவு.

நோக்கியா - பிளிக்கர் - தளத்துடன் கை கோத்திருக்கிறார்கள். நீங்கள் எடுக்கும் போட்டோ, பிளிக்கர் தளத்தில் உள்ள போட்டோ ஆல்பத்தில் சென்று ஜம்மென்று ஐக்கியமாகி விடுகிறது.

பை.த.வே - பிளாகர் தன்னுடைய மொபைல் வலைப்பதிவு சேவையை மிக மிகச் சுலபமாக்கியிருக்கிறது. ஒரு எம்.எம்.எஸ் போட்டோ எடுத்து, go@blogger.com என்று அனுப்பினால் போதும். உங்களுக்கே உங்களுக்காக உடனடியாக ஒரு அக்கவுண்ட் கிரியேட் செய்து உங்களுடைய படத்தினையும் காண்பித்துவிடுகிறது. லவ்லி!
~~~~~~~~~~~

நோக்கியாவில் - அவுட்லுக்(Outlook) போன்ற மென்பொருட்களுடன் காண்டாக்ட்ஸ் (contacts) சிங்க்ரோனைசேசன் (synchronization) செய்ய முடியும். சோனி எரிக்ஸன் அப்படி அல்ல. அதைத் தவிர, பி.டி.எப், வேர்ட், எக்ஸெல் போன்ற டாக்குமெண்ட்களை பார்க்கும் வசதியும் நோக்கியாவில் உண்டு.


மொத்தத்தில் - நோக்கியா என்.73, சோனி எரிக்ஸனை விட சிறப்பான ஒரு மாடல். உங்களுடைய தேவை அதிகமில்லை என்றால் தாராளமாக கே.800 போகலாம். ஆனால், நீங்கள் உங்கள் போனிலிருந்து அதிகம் எதிர்பார்க்கிறீர்கள் என்றால் என். 73க்கு ஒரு 'க்ளோஸ் லுக்' கொடுங்கள்!

டிப்: கூடவே என்80 ஐயும் ஒரு பார்வை பார்த்து வையுங்க. மிக முக்கிய வித்தியாசம் வைபை (wifi) - வயர்லெஸ் லான் - இருக்கிறது. குறை: பேட்டரி, கேமராவின் சில நுண்ணிய உபயோகப் பிரச்சனைகள்.

பெரும்பாலும் போன்களில் எனக்குப் பிடிக்காதது இந்தப் போன்களிலும்...

ஹாண்ட் செட் - அதாவது காதில் வைத்துக்கொள்ளும் ஸ்பீக்கர் - கள் இருந்தால் மட்டுமே எப்.எம் ரேடியோ கேட்க முடியும் என்ற கட்டாயத்தை இந்தப் போன்கள் விதிக்கின்றன. என்னத்தான் டெக்னிக்கலாக ஹாண்ட் செட்கள் ஆண்டெனாவாக உபயோகிக்கபடுகின்றன என்று புரிந்து கொண்டாலும், பயனர்கள் பார்வையில் இது எரிச்சல்.

*********

இந்த வருடத்தின் மத்தியில் வெளியிடப்பட இருக்கும், ஐ.போன் - ஐபாட் மூலம் பிரபலமான ஆப்பிள் கம்ப்யூட்டரின் படைப்பு. ஒட்டுமொத்த செல்போன் உலகையும் அதிசயமாகப் பார்க்க வைத்திருக்கும், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் போன் இது. 8 ஜி.பி மெமரியுடன், இதுவரை வந்திருக்கும் அனைத்து செல்பேசி தொழில்நுட்பங்களையும் உள்ளடக்கி 2007ன் மத்தியில் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் இந்த பேசியின் விலையும் அதிகமில்லை என்பதே இதன் எதிர்பார்ப்பிற்கு மற்றுமொரு காரணம். ஆண்டின் இறுதியில் உலகெங்கும் கிடைக்கும் என்று தெரிகிறது. http://www.apple.com/iphone/

"விகாஸ் சாப், நோக்கியா என்.73 நல்லாருக்கு. இன்னும் இந்த பழைய போனையே வச்சுகிட்டிருக்கீங்களே. எப்ப மாத்தப்போறீங்க?"

"அடுத்த வருசம் ஐ.போன் வந்தவுடனே ஒரேயடியா மாத்திக்கலாம்பா. "

"!!!!!!!!!"

கிசு.கிசு: ஐ.போன் என்பது ஏற்கனவே ஒரு ஆன்லைன் டெலிபோன் கம்பெனி உபயோகப்படுத்தும் பெயராம். ஆப்பிளின் அறிவிப்பு வந்த உடனேயே இதனை எதிர்த்து அந்த கம்பெனி கோர்ட்டிற்குப் போயிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
posted by சாகரன் @ 1/25/2007 11:31:00 PM   5 comments
Saturday, January 20, 2007
Maruthy Zen for 1000 Rupees
சில வாரங்களாகவே கார் வாங்கலாமா என்ற எண்ணம் எனக்கு இருந்து வந்தது. காலையில் எழுந்தவுடன் தினசரிகளைப் பார்ப்பது ஒரு பழக்கமாகிவிட்டிருந்தது. அப்படித்தான் அன்று காலையில்...
தினசரியில் ஒரு விளம்பரம் - 1997 மாருதி சென் கார் 1000 ரூபாய் மட்டுமே. அந்த விளம்பரத்தை என் மனைவியிடம் காட்டினேன். "வேடிக்கையாக இருக்கிறது ஏதாவது சின்ன சைஸ் கேம் கார் போலிருக்கு" என்றேன். ஆனால் அவளுக்கு அதில் ஆர்வம் வந்துவிட்டது. 'உடனே போன் செய்யுங்க' என்றாள். 'என்னம்மா இது. இப்பத்தான் 6:30 மணி ஆகுது. அவங்க தூங்கி கிட்டு இருந்தாலும் இருப்பாங்க. இப்ப எப்படி போன் செய்யறது'. 'சும்மாருங்க அதெல்லாம் எழுத்ந்திருச்சிருப்பாங்க. நீங்க உடனே போன் பண்ணுங்க'. 'சரி நீ விடமாட்டே. நான் செஞ்சு பார்க்கிறேன்'.

போன் செய்தேன். எதிர் முனையில் ஒரு பெண்மணியின் குரல்.

'ஆம். 1000 ரூபாய்தான். '

'பணமாக பெற்றுக்கொள்ளமாட்டேன். நீங்கள் செக்காகத் தர வேண்டும்.'

'பர்ஸ்ட் கம் பர்ஸ்ட் சர்வ்ட். நீங்கள் முதலில் வந்தால் கார் உங்களுடையது.'

என்னால் நம்ப முடியவில்லை. ஒரே குழப்பமாக இருந்தது. ஆனால் என்னுடைய பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த என் மனைவி. என்னிடமிருந்து போனைப் பிடுங்கி..'மேடம், நாங்க காரை கண்டிப்பா வாங்கிக்கறோம். கண்பர்ம்ட். உடனே வர்றோம்' என்று சொல்லிக்கொண்டிருந்தாள். 'அது எப்படி 1000 ரூபாய்க்கு கார் கிடைக்கும். இதெல்லாம் நம்பற மாதிரி இல்லை. ஏதாவது திருட்டுப் பொருளா இருக்கும்' என்று நான் சொல்லிக்கொண்டிருந்ததை அவள் கவனிக்கக்கூட இல்லை. 'சும்மாருங்க.. ஏதோ நம்மளுக்கு அதிர்ஸ்டம் அடிக்குது, நீங்க நொய் நொய்னுகிட்டு. நீங்க பாட்டுக்கு தேவையில்லாம வாயத் தொறந்தீங்கண்ணா இருக்கு சொல்றேன். சீக்கிரமா ஆட்டோ பிடிங்க.'

உடனடியாக ஆட்டோ பிடித்து அந்த இடத்திற்குச் சென்றோம். காலிங் பெல்லினை அழுத்துவதற்கு முன் வீட்டு வாசலில் இருந்த அந்தக் காரை நோட்டமிட்டேன். கார் நன்றாகவே இருந்தது. நீல கலர். இஞ்சின் இல்லாவிட்டாலும், அந்த ஸ்டீல் பாடி கூட ஆயிரம் ரூபாய்க்கு தகுதி தான்.

கதவைத் திறந்தது ஒரு 30 வயது மதிக்கத்தக்க பெண்மணி. டெலிபோன் குரலில் இருந்த தளர்ச்சியைப் பார்த்து நான் யாராவது வயதானவர்களாக இருப்பார்கள் என்று நினைத்திருந்தேன். "வணக்கம். நாங்க காலையில உங்களுக்கு போன் பண்ணியிருந்தோம்", "உள்ள வாங்க. செக் எடுத்துட்டு வந்திருக்கீங்களா?"

உள்ளே நுழைந்த அவர், ஒரு கத்தையாக சில காகிதங்களைக் கொண்டு வந்தார். சேல் டீட், அக்ரிமெண்ட் என்று பல பார்மாலிட்டி பேப்பர்கள் இருந்தன. ஒவ்வொன்றாக படித்து பார்த்து கையெழுத்திட்டுக்கொண்டிருந்தேன். கூடவே எனக்கு டென்ஷனும் ஏறியது. ஆயிரம் ரூபாய் காருக்கு இவ்வளவு பேப்பரிலும் முழுமையாக எழுத வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வி என்னைக் குடைந்து கொண்டிருந்தது. என் மனைவியோ பாதி வானத்திலும் பாதி நிலத்திலுமாக இருந்தார். என்னை 'எந்த கேள்வியும் கேட்காதீங்க' என்று சைகை காட்டிக்கொண்டிருந்தார்.

'காரைப் பார்க்கிறீர்களா?' - சாவியைக் கொடுத்தார் அந்த பெண். நானும் என் மனைவியும் வெளியில் வந்தோம். காரில் முதலில் இஞ்சின் பானட்டை ஓபன் செய்து பார்த்தேன். ஆச்சரியம் இஞ்சின் கூட இருந்தது. எனக்கு நம்ப முடியவில்லை. என் மனைவி இப்பொழுது என்னை நச்சரிக்க ஆரம்பித்தார்.
"ஏங்க. இவ்வளவு அழகான காரை ஏங்க ஆயிரம் ரூபாய்க்கு விற்கணும். ப்ளீஸ் கேளுங்க."

நான் அந்த பெண்மணியிடம் சென்றேன். "மேடம். தயவு செஞ்சு நான் கேட்கறதுக்கு நீங்க கட்டாயம் பதில் சொல்லணும். இவ்வளவு நல்ல காரை நீங்க ஏன் வெறும் ஆயிரம் ரூபாய்க்கு விற்கறீங்க".

காரணம் தெரிந்தபோது எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.அவருடைய கணவன் ஒரு விபத்தில் ஒரு வாரத்திற்கு முன் இறந்துவிட்டார். அவனுடைய உயில் பிரகாரம், இந்தக் காரினை விற்று வரும் பணம், அவனுடைய ஆபீஸ் லேடி செக்ரட்டரிக்குச் செல்ல வேண்டுமாம்!

வரும் போது, என் மனைவி, ' பாருங்க. நாங்க பெண்கள் எவ்வளவு புத்திசாலிகள் என்று'.

'பெண்கள் புத்திசாலிகளா இல்லையா என்பதை உங்கள் கருத்துக்கே விட்டு விடுகிறேன்'

*****

டோஸ்ட் மாஸ்டர்ஸ் - பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். கேள்விப்படாதவர்களுக்கு - இது பப்ளிக் ஸ்பீக்கிங் - எப்படி என்று சொல்லிக்கொடுக்கும் ஒரு குழு. உலகமெங்கும் நடத்தப்படுகிறது. பல வருடங்களாக ரியாத்-திலும் நடத்தப்படுகிறது. சின்ன சின்னதாக குழுக்களாக - சுமார் 30 பேர் இருப்பார்கள் ஒரு TM குழுவில்.

இந்த வார டோஸ்ட் மாஸ்டர் மீட்டிங்கில் - திரு. சுப்ரமணியம் என்ற ஒரு டோஸ்ட்மாஸ்டர் பேசிய பேச்சுதான் மேலேயுள்ளது. இது உண்மையில் நடந்ததா, அவருக்கு நிகழ்ந்த நிகழ்ச்சியா என்பது தெரியவில்லை. ஆனால் 'நகைச்சுவைப் பேச்சு' என்ற தலைப்பிற்கு நச்சென்ற கதை! இல்லியா?


*****

இந்த நிகழ்ச்சி தொடர்பான் பதிவு : http://sakaran.blogspot.com/2007/01/photo-play.html
மூலக்கதையின் ஆசிரியர் மல்லாடி வெங்கட கிருஷண மூர்த்தி.
posted by சாகரன் @ 1/20/2007 11:17:00 AM   0 comments
எழுத்துக்கூடத்தின் சந்திப்பு -3

அடுத்து வந்த வாரங்களின் பார்வைகள் - எழுத்துக்கூடத்தின் முக்கிய ஆர்வலர், என் இனிய நண்பர், ரியாத் வாழ் நண்பர்களுக்கு மிகவும் அறிமுகமான 'லக்கி ஷாஜஹான்' அவர்களால் தொடரப்படுகிறது (இங்கு எழுதப்போகிறேன் என்று லக்கியிடம் ஏற்கனவே அனுமதி வாங்கிட்டம்ல :-))


எழுத்துக்கூடத்தின் சந்திப்பு
-3
ஒரு பார்வை. (March 3 2006)

- லக்கி ஷாஜஹான்

எ.பட்டறை மூன்றாம் கூட்டம் என் பார்வையில் - லக்கி ஷாஜஹான்


ரியாத் எழுத்துப்பட்டறையின் மூன்றாம் கூட்டம் நேற்று அக்காரியா சமூகவியல் கூடத்தின் முற்றத்தில் நடைபெற்றது.. என்னைப் போல் இலக்கியவாதி ( சரி சரி அடங்குடா... ) நண்பர்கள் பலர் கலந்து கொண்டு தம் தம் கருத்துகளை சிறப்பாக பகிர்ந்தளித்தார்கள்..

முதல் இரண்டு கூட்டங்களில் கலந்து கொள்ள முடியாமல் போனதால் இந்த முறை நிச்சயம் போயே தீருவது என்று நானும் கவிஞர் ஹ.பஃகுருதீனும் சரியான நேரத்துக்கு சென்று ஆஜராகி விட்டோம். இலக்கிய கூட்டம் என்றாலே 'சிறப்புரை,இலக்கியத் தமிழ்,அது இதுன்னு கொன்னுடுவாய்ங்கப்பா..' என்று இது போன்ற கூட்டங்களை தப்பாக புரிந்து வைத்திருக்கும் என் போன்ற இலக்கியோபோஃபியா பாமரன்களுக்கு இவர்களின் சிறப்பான அணுகுமுறைகள் ,செயல்திட்டங்கள், தெளிவான நிரைவுவரைகள் ஆச்சரியத்தை தந்தது..

முதல் கட்டமாக வாரந்தோறும் இலக்கிய சாம்ராட்களில் ஒருவரான எஸ்.ராமகிருஷ்ணனின் கதாவிலாசம் ( விகடன் தொடர் )அறிமுகப்படுத்தும் சிறுகதை எழுத்தாளர்களின் படைப்பு , நடையமைப்பு, கதையில் கவர்ந்தவை போன்ற அம்சங்களை ரசிக்க கற்று தருகிறார்கள். ஒருவர் படிக்க அதன் பிரதிகள் எல்லோருக்கும் தரப்பட்டு முக்கியமான இடங்களில் படிப்பது நிறுத்தப்பட்டு உவமைகள் ரசிக்கப்பட்டு உணர்வுகள் வியக்கப்பட்டு அடடா மிக அருமையான மணித்துளிகள் அவை.. இம்முறை ஐயா மாசிலாமணி அவர்கள் இதை திறம்படவே செய்தார்கள். சுயம்புலிங்கம் என்ற இலக்கிய உலகம் அதிகம் அறியாத ஒரு எழுத்தாளரின் சிறுகதை பற்றிய எஸ்.ராமகிருஷ்ணனின் பார்வை நேற்றைய நிகழ்வுக்கு எழுத்துப்பட்டறையில் இவ்விதம் விவாதிக்கப்பட்டது..

சாதாரணமாய் எழுதும் ஆர்வம் கொண்ட எல்லோருக்கும் இது போன்ற பயிற்சிக் கூடங்கள் ஒரு வரப்பிரசாதம்.. பயன்படுத்திக் கொள்பவர்கள் படைப்பாளிகளாகலாம்.. படைப்பாளிகள் இன்னும் தங்களை பட்டை தீட்டிக் கொள்ளலாம்.. ஏனெனில் அதற்குரிய எல்லா விஷயங்களும் இங்கு சுவையாக அலசப்படுகின்றன.. ஆங்கில எழுத்தாளர்களின் படைப்பு நடை கூட விட்டுவைக்கப்படுவதில்லை. நல்ல விஷயங்கள் எட்டுத் திக்கிருப்பினும் இங்கொணர்ந்து ஆய்வோம் என்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.. இது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.

திருமதி கீதா சங்கர் ஏற்பாடு செய்திருந்த சிறிய தேனீர் பகிர்தல் இடைவேளையில் கூட நேரம் விரயம் செய்யாமல் பேச்சு புற்று நோய் உலகம், சித்த மருத்துவம், ஜெயகாந்தன், எழுத்தாக வந்த படைப்புகள் திரையில் இருட்டடிப்பு செய்யும் அவலம், சுனாமி என்று பல்வேறு பாதையில் பயணித்தது இன்னும் சுவாரஸ்யமான விஷயம்.. எவ்வளவு தகவல்கள், எவ்வளவு பகிர்தல்கள் ...' உலகம் ரொம்ப பெரிசு நைனா ' என்று சொல்லியபடியே என் திறந்திருந்த வாய்க்குள் அடிக்கடி போய் வந்தார் ஒரு ஈயார்.

ஒரு கதை, ஒரு கவிதை, ஒரு கட்டுரை என்ற பொருள் கொண்டு வாரம் ஒரு முறை ஆய்வோம், பிறர் படைப்புகள் அல்லது நமது படைப்புகள் பற்றி நிறை,குறை,நடை பற்றி அப்போது பேசுவோம் என்ற ஐயா மாசிலாமணி அவர்களின் கருத்து எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதிகம் தமிழ் நாவல்கள் தொகுப்பு வைத்திருக்கும் அன்பர் ஒருவரும், சிலப்பதிகாரம் பற்றி ஆய்வு செய்து அதிகமதிகம் கட்டுரைகள் படைத்திருக்கும் நண்பர் ஒருவரும் நேற்றைய புதுமுகங்களாக அறிமுகம் ஆனார்கள். 'தன்னேரில்லாத தமிழ்' எப்படியெல்லாம் எல்லாரையும் ஒன்று சேர்க்கிறது பாருங்கள்..

எழுத்துப்பட்டறையின் இன்றைய கூட்டத்தில் நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்கள் என்று வரும்போது நண்பர் பஃகுருதீனீடம் கேட்டேன். எஸ்.ராமகிருஷ்ணனின் நடை என்ன என்பதும் இனி பெயரே போடாமல் அவர் படைப்பு வந்தால் கூட தாம் அதை கண்டுபிடித்துவிட முடியும் எனவும் கூறினார்.. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.. விரைவில் கவிஞர் பஃகுருதீனும் சிறுகதை எழுத கூடும்..

அடுத்த கூட்டத்தில் இலக்கிய எழுத்தாளர்கள் வரிசையில் அதிகம் பேசப்படும் தி.ஜானகி ராமன் படைப்புகள் பற்றி அலசப்போவதாக அறிவித்தார்கள்.. மோகமுள்,அம்மா வந்தாள், செம்பருத்தி போன்ற படைப்புகள் செய்து அதிகம் பேசப்பட்டவர் ஜானகி ராமன்.. நிச்சயம் அடுத்த கூட்டம் தித்திப்பான விருந்தாகவே இருக்க கூடும்.. மார்ச் 17 ஆம் தேதிக்கு இன்னும் ப...தி...மூ...ன்....று நாள்...!
posted by சாகரன் @ 1/20/2007 05:50:00 AM   0 comments
Monday, January 15, 2007
கலீல் அல்-முவைல் (Khalil)
லீல் அல்-முவைல் - இந்தப் பெயர் பல தினங்களுக்கு என் மனதில் பதியவே இல்லை. ஆனாலும் அந்த நண்பனின் முகம் மட்டும் பதிந்திருந்தது. என்னுடைய அலுவலகத்தின் நான் இருந்த சாரியின் மறுகோடியில் இருந்தது அவனுடைய இடம்.

சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர், 'சன் ஜாவா சர்டிபிகேசன் செய்யணும், உன் கிட்ட மெட்டீரியல் இருக்கா' என்று கேட்டு பேசியதுதான் அவனுடனான முதல் பேச்சு. டெக்னாலஜியில் ஆர்வமாக இருப்பவர்களுடன் என்னையும் அறியாமல் ஒரு நட்பு வட்டம் உண்டாகிவிடுவது எனக்கு பல வருடங்களாக ஏற்படும் நிகழ்வு. கலீல் டெக்னிகலாக திறமையானவனாக எங்கள் அலுவலகத்தில் சேரவில்லை.ஆனால் ஆர்வம் இருந்தது. ஆர்வம் எவரையும் திறமையானவராக மாற்றி விடும் என்பது அனுபவ உண்மை. அதே போலத்தான் தொடர்ந்து வந்த மாதங்களில் பல விடயங்களையும் கற்றுக்கொண்டு கலக்கி வந்தான்.

அவ்வப்போது - சில தளங்களை என்னிடம் காட்டி வருவான். முக்கியமாக கிடார் மாஸ்டர் ஒருவருடைய தளம். அதில் அவனுடைய பிளாஷ் மென்பொருள், இமேஜிங் திறமை இப்படி பல விதமாக புதுமைகளைப் புகுத்தியிருப்பான். நான் மனம் திறந்து பாராட்டுவதும், உன்னிப்பாக கவனித்து சில விசயங்களைச் சொல்லிப் பேசுவதும் அவனுக்குப் பிடித்திருக்க வேண்டும்.

நானும் பார்க்கும் போதெல்லாம், 'என்னாச்சு கலீல் உன் ஜாவா சர்டிபிகேசன்' என்று கேட்பது வழக்கம். அடுத்த மாசம், இந்த செப்டம்பரில், வர்ற ஜனவரியில் என்று பல மாதங்களாகச் சொல்லிக்கொண்டிருந்தான். கடைசியில் ஒரு முறை தேர்வு கூட எழுதிவிட்டான். ஆனால் பாஸாக வில்லை. வருத்ததுடன் இருந்தவனைத் தேற்றினேன் - "கவலைப்படாதே கலீல். என்னையே எடுத்துக்கொள். நான் இரண்டு முறை சிறிய இடைவெளியில் தோற்றவன். விடாது மூன்றாம் முறை முயற்சித்தபோதுதான் பாஸாக முடிந்தது. இப்பொழுதெல்லாம் நிறைய எக்ஸாம் டம்ப்கள்(Exam Dumps) கிடைக்கின்றன. சாம்பிள் டெஸ்ட்கள் இருக்கின்றன. இவற்றை பிராக்டிஸ் செய்தாலே போதும். மறுபடி முயற்சி செய்." ஆறுதல் அடைந்தவனாகத் தோன்றி 'சரி' என்று மனமில்லாமல் சொல்லி வைத்தான்.

திறமை அதிகரிக்கும் போது, வேலைக்கானத் தேவை இருப்பதில்லை. அவனுக்கும் அப்படியே. சில மாதங்களாக கொடுக்கப்படும் வேலை ஜுஜுபி யாக இருப்பதாகச் சொல்லிக்கொண்டிருந்தான். நானும் என்னாச்சு உன்னுடைய ஜாவா என்று கேட்பதை நிறுத்தவில்லை.

*****

தேடிப்பிடித்து நிறுத்திய பார்க்கிங். அருகில் வேகமாக இடிப்பது போல ஒரு வண்டி வந்தது கண்டு திடுக்கிட்டேன். திட்டுவதற்காக கோவம் வரவழைக்க மனசு முயற்சித்துக்கொண்டிருந்தது. டிரைவர் சீட்டிலிருந்து இறங்கினான் கலீல். ஹே! ஹவ் ஆர் யூ! கேப் ஹாலக்!! - அல் ஹம்ததுல்லா! என்னை அரேபிய முறையில் கட்டிக்கொண்டு விடுவித்தான். நெகிழ்ச்சியாக உணர்ந்தேன்.

"என்ன இந்தப் பக்கம்?"

"இது தெரியாதா நான் இப்ப இங்கேத்தான் வேலை செய்யறேன்."

"என்னது?!"

"ஆமா.. போன மாசம் ரிசைன் பண்ணிட்டு இங்க வந்து ஜாயின் பண்ணிட்டேன். நீ விடுமுறையில் இருந்தாய் அதனால்தான் உன்னிடம் சொல்லிக்கொள்ள முடியவில்லை. மிகவும் ப்ரஷாக பீல் பண்ணுகிறேன். என்னை மதித்து பேசுகிறார்கள். எனக்கென்று ஒரு டீம் இருக்கிறது. மிகுந்த நம்பிக்கையாக உணர்கிறேன்."

"வாவ்.. கிரேட் யார். என்ன ஜாப். அதே ஜாவா தானா?"

"இல்லை. நான் இப்போ இங்கே ததாவுல் (ஸ்டாக் மார்கெட்டிங்) மேனேஜர். பிசினஸ் சைடு. இன்வெஸ்ட்மெண்ட் டிபார்ட்மெண்டில்."

"அட.. கலக்கல்தான்." - என் அலுவலகத்தில் அவன் வெறும் டெவலப்பர் மட்டுமே!

"நிறைய பேரு இங்கத்தான் இருக்காங்க. நம்ம ஆபீஸ்ல வேலை செஞ்சாங்களே ஹானி அல் சலாம், தாமர் யூசுப், ஹுசைன் அல் யாமி, ஷகீல் எல்லாரும் இங்கத்தான் வேலை பார்க்கறாங்க."

"போடு. அப்ப மொத்த டீமும் இங்க ஷிப்ட் ஆகிட்டீங்கண்ணு சொல்லு!"

"ஒவ்வொருததவங்க ஒவ்வொரு ஏரியா. நான் மொத்தமா பிசினஸ் பக்கம். அதனால அவங்களோடல்லாம் இண்டராக்சன் கிடையாது. உனக்கு ஒண்ணு தெரியுமா? நம்ம ஆபீஸ்ல என்னோட பிராஜக்ட் மேனேஜர் இருப்பாருல்ல அவர் கூட சி.வி கொடுத்திருக்காரு. ஆனா கண்டிப்பா என் டிபார்ட்மெண்ட்ல கொடுக்க மாட்டேன்."

"ம்.. :-)"

"இன்னிக்கு ஈவினிங் ஒரு ப்ளே இருக்கு வர்றியா? "

"என்னது பிளேயா? "

"ஆமா. நான் ஆக்டர் இல்லை. ஆனால் கிடார் ப்ளே பண்றேன்."

"ஓ.. நீ ஒரு மாஸ்டருக்காக வெப்சைட் பண்ணினியே! "

"ஆமா. அவருடைய மியூசிக் ட்ரூப்தான்."

எனக்கு மனசுக்குள் பட படப்பு அதிகமாகவே இருந்தது. சவுதியில் சவுதி ட்ரூப் ஒன்றினால் நடத்தப்படும் ட்ராமாவுக்கு செல்ல முடிந்தால்.. எவ்வளவு நன்றாக இருக்கும். இதைப் பற்றி இணையத்தில் எழுதலாம். எங்கேனும் குறித்து வைக்கலாம். ஆனால் மொழி புரியாதே! பரவாயில்லை. எல்லா மொழிகளிலும் ஒரே உணர்வுகள் தானே. கெஸ் பண்ண முடியாதா என்ன? ஐயையோ.. இன்னிக்கு டோஸ்ட் மாஸ்டர் மீட்டிங் உண்டே. போகணுமே. நான் கூட பேர் கொடுத்திருக்கேன். சே..

"கலீல்.. ஐ லவ் டு கம். ஆனால் இன்னிக்கு முடியுமா தெரியல."

"சரி முடிஞ்சா வா. இந்தா இன்விடேசன். அல்மாதர் ஸ்ட்ரீட் கடைசில வந்தால் இந்த ஆடிட்டோரியம் வரும். ஓ.கே கல்யாண். மறுபடி பார்க்கலாம். நேரம் கிடைக்கும் போது போன் செய்."

"ஸ்யூர்."

கார் கிளம்பிச் சென்றது. அவனுடைய நினைவு மட்டும் மனசில் தொட நின்று கொண்டிருந்தேன். பெரும்பாலும் இதுவே கலீலை நான் சந்திக்கும் கடைசி தருணமாக இருக்கக்கூடும். 'இனி அவனுக்கு ஜாவா சர்டிபிகேசன் தேவையில்லை' என்ற எண்ணம் மெல்லியதாக மனதில் தோன்றி மறைந்தது.
posted by சாகரன் @ 1/15/2007 05:16:00 PM   0 comments
Sunday, January 14, 2007
விசாலமும் - விசாகாவும் (Visaka Hari)
"விசாகா ஹரி" - இன்றைய தமிழகத்தின் சங்கீதப் புயல்! இவர் மட்டும் மெயின் ட்ராக் பாட வந்திருந்தால் பலர் ஓரம் கட்டப்பட்டிருப்பர் - இப்படி ஒரு கட்டுரை நான் கல்கியில் படித்து சில மாதங்களுக்கு மேலாக இருக்கும். நண்பர் ஒருவர் மூலமாக அவரது 'ஹரி கதா' எம்.பி.3 கிடைத்து நான் கேட்டிருக்கிறேன். முழுக்க முழுக்க பிராமண பாஷையில் நிகழ்த்தப்படும் உபன்யாசம். கூடவே சங்கீதமும். இரண்டு மணி நேரம் கேட்க பொறுமையில்லாமல் பாதியில் நிறுத்தியிருக்கிறேன்.
*
இந்த இடத்தில் ஒன்று சொல்லவேண்டும். இன்று மிகப் பிரபலமாக இருக்கும் ஒரு முக்கிய டெக்னாலஜி இம்ப்ரூவ்மெண்ட் - ஒலிப் புத்தகங்கள்.
இன்று கூட பத்ரியின் பதிவில் இது குறித்து எழுதப்பட்டிருக்கிறது.
ஒலிப் புத்தகங்கள். இன்று அதிக அளவில் இணையத்தில் விற்கப்படுகிறது; வாங்கப்படுகிறது. சுமார் 300 MB அளவில் ஹாரிப்பாட்டரின் எம்.பி.3 ஆடியோ புத்தகம் எனக்கு கிடைத்தது. கேட்க ஆரம்பித்த சில நிமிடங்களில் நம்மை படிக்கும் உலகிற்கு அழைத்துச் செல்லும் குரல். ஆனால் எனக்கு இதிலிருக்கும் சந்தேகமெல்லாம் - எவ்வளவு நேரம் பொறுமையாக கேட்க முடியும்? நீண்ட புத்தகங்களாக இல்லாமல் 10 பக்கங்களுக்கு ஒன்று என்ற விதத்தில் ஒருவேளை எம்.பி.3 கிடைக்கப்பெற்றால் நன்றாக இருக்கும். அதைவிட முக்கியம். புக்மார்க்கிங்க். எங்கிருந்து விட்டோமோ அங்கிருந்து திரும்ப ஆரம்பிக்க இயல வேண்டும். பல இடங்களில் குறித்துக்கொள்ள இயலவேண்டும். அப்படிப்பட்ட மென்பொருட்கள் ஆடியோ புத்தகங்களுக்காகவே இருந்தால் நன்றாக இருக்கும். (ஏற்கனவே இருக்கலாம்). இந்த டெக்னாலஜியின் பிரச்சனை மற்றவை போலத்தான். ஒரு முறை எம்.பி.3 வந்துவிட்டால் அவ்வளவுதான். ஆளாளுக்கு அடுத்தவருக்கு அனுப்பிவிடுவார்கள். பணம் பார்ப்பது கடினமாகிவிடலாம்.

இதற்கும் ஒரு அருமையான டெக்னாலஜியை ராகா பயன்படுத்தியிருக்கிறது. ராகா.. மைக்ரோசாப்டின் காப்பிரைட் மெதேடை பயன்படுத்துகிறது. இந்த டெக்னாலஜி ஈ-புத்தகங்களின் அமைப்பை ஒத்தது. அதனைப் பயன்படுத்தி குறிப்பிட்ட கணினிக்கு மட்டுமேயான காப்பிரைட்டினைத் தருகிறார்கள்.

*
சென்னை கிருஷ்ண கான சபாவில் காலை 9 மணிக்கே அரங்கம் நிரம்பி வழிந்துவிட்டது. சுற்றிப்போய் பின் பக்கமாக நுழைந்து எள் விழக்கூட இடமில்லாத கூட்டத்தினிடையே ஊடாடிப்போய் ஒரு தூண் ஓரமாக நின்று கொண்டு கேட்க ஆரம்பித்தேன்.

விசாகாவின் குரலின் இனிமையும் கம்பீரமும் பாவமும் சர்வ நிச்சயமாக கூட்டத்தினை கட்டிப்போட்டிருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை 'வெள்ளை தலை'கள். என்னைத் தவிர என் வயதொத்த இளைஞர்கள் யாராவது இருக்கிறார்களா என்று சுற்று முற்றும் பார்த்தேன். ஒருவர் கூட கண்ணில் படவில்லை. ஓரிரு இளைஞிகள் இருந்தனர். ஒருவேளை சங்கீதம் படிப்பவர்களாக இருக்ககூடும் அல்லது பாட்டி தாத்தாவை அழைத்து வந்திருக்கக்கூடும்!

தியாகராசரின் சரிதம். பின்னி எடுத்துக்கொண்டிருந்தார் விசாகா. இவரது ஸ்பெஷாலிட்டியே சங்கீதமும் கதையும் சேர்த்து சொல்வதுதான். கேசட் எல்லாம் வேஸ்ட். நேரடியாக கேட்கும் போது கிடைக்கும் திருப்தியே அலாதி! கர்னாடக சங்கீதத்தில் எனக்கு மிகவும் பிடித்தது தமிழ்ப்பாடல்கள் இதற்காகவே ஸ்பெஷலாக எனக்கு நித்யஸ்ரீயைப் பிடிக்கும். நிறைய அருமையான தமிழ்ப்பாடல்கள் கொண்ட கேசட்கள் இவருடையவை. அன்றைய தியாகராசரின் சரித்திர உபன்யாசத்தில் தமிழிசை எங்கு இருக்கப்போகிறது என்று நினைத்திருந்தேன். சரிதத்தின் ஓரிடத்தில் சரஸ்வதியின் பெயர் வரும்போது - சட்டென்று 'வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்' என்ற பாரதியின் பாடலைப் பாடி என்னை ஆச்சரியப்பட வைத்தார்.

*
விசாகா பற்றி: இந்த வருடத்தின் டிசம்பர் சீசனில், வேறு யாருக்குமே இல்லாத அளவுக்கு மிகப் பெரிய அளவில் கூட்டம் குவிந்தது, 'விசாகா ஹரி' அவர்களுக்கு மட்டும்தானாம்! நாரத கான சபா-வில் ரெக்கார்ட் பிரேக் செய்ததாம் கூட்டம்! ஒரு பெரிய ரவுண்ட் வரப்போகிறார் இவர் என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது!!
posted by சாகரன் @ 1/14/2007 05:44:00 PM   1 comments
Friday, January 12, 2007
Barbe-Q வாசனையும் இலக்கிய கூட்டமும்
ஞானரதம் 1970 ஜனவரியில் துவக்கப்பட்டது. ஜனவரியிலிருந்து முதல் மூன்று இதழ்கள் ஆசிரியர் குழுவின் பெயர்கள் இல்லாமலேயே வெளிவந்தன. நான்காம் இதழிலிருந்து நிர்வாக ஆசிரியராக தேவ சித்ரபாரதி (அப்பாஸ் இப்ராஹிம்) பணியாற்றினார்.,...........
............பதிப்பாசிரியராய்ச் சித்ரபாரதி ஜெயகாந்தனுக்கு அமைத்த களன் ஒரு புதிய கருத்துச் சாளரத்தைத் தமிழில் திறந்து வைத்தது......

http://pksivakumar.blogspot.com/2007/01/blog-post_116793739018173033.html


*******

'தம்பி என்ன பண்றீங்க?'
'பைனல் இயர் சார். பிராஜக்ட்க்கு கம்பெனி தேடிக்கிட்டிருக்கேன்'
'நம்ம கம்பெனியிலேயே சேர்ந்துடறீங்களா?'

சட்டென்று வாய்ப்பு கிடைத்தது. கூட இருந்தவர்கள் எங்கெங்கோ சென்று கொண்டிருக்க சென்னையில் எவரையும் தெரியாத அவனுக்கு - சும்மா இருக்கப் பிடிக்காமல் லொட்டு லொசுக்கு கணினி வேலை செய்ய வந்தவனுக்கு - இந்த வாய்ப்பு பெரிய்ய்ய்ய்ய விசயம்.

சுமார் 65 வயது மதிக்கத்தக்க இளைஞர் அவர். அவ்வளவு சுறு சுறுப்பு. கதர் ஜிப்பா, வேட்டி.கண்ணியமிக்க தோற்றம். சரியென்று தலையசைத்தான்.

அறையிலிருந்து வெளியேறிய பின்னர் சுற்றிப்பார்த்தான். அது ஒரு வீட்டின் மாடிப்பகுதி. அதனை அலுவலகமாக மாற்றியிருந்தார்கள். மாடியின் ஒரு ஓரத்தில் ஆஸ்பெட்டாஸ் சீட் போட்டு ஒரு ரூம் இருந்தது. அங்கே ஒரே புத்தகக் குவியல்களாகக் கிடந்தது. பிற்காலத்தில் அவன் வேலை பார்த்த 3 மாதங்களும் அவனுடைய புதையல்களாக அந்த குப்பைகள் இருக்கப்போகின்றன என்பதை அவன் அறிந்திருக்கவில்லை. ஆம். அத்தனையும் அற்புதமான புத்தகங்கள். தமிழ் ஆங்கிலம் என இறைந்து கிடந்தன. கட்டு கட்டி போடப்பட்டிருந்த குவியலில் ஒரு புத்தகம் பிதுங்கிக்கொண்டிருந்தது. அதன் மேலட்டையில் - என் ஹஜ் பயணம், ஹாஹியார் அப்பாஸ் இப்ராஹிம்.

******

அவரை இத்தனை வருடம் கழித்து பார்ப்போம் என்று நான் நினைக்கவில்லை. தொடர்பு கிடைத்து நேரில் சந்தித்தப்போது 8 வருடங்களுக்கு முன் பார்த்த கம்பீரத்தில் எந்தத் தொய்வும் இல்லை.

"ஏதாவது செய்யணும் தம்பி.சோம்பேறித்தனமா இருந்துடக் கூடாது. நல்ல திறமையான மக்கள் நம்மூர்ல இருக்காங்க. அவங்கள நல்லா எழுதக்கூடியவங்களா நாம தயார் பண்ணனும். புதிய விசயங்கள தமிழ்ல எழுதணும். முக்கியமா தொழில்த் துறை சார்ந்த புத்தகங்கள் நிறைய வரணும். அதுக்கான முயற்சிகள்ல ஈடுபடுங்க. நான் உங்க கூட இருந்து எப்படி செய்யணும்னு சொல்லிக் காட்டறேன். அதுக்கப்புறம் நீங்களே புடிச்சுக்குவீங்க.."

உற்சாகப் புதையலாக எல்லா நேரமும் அவரிடமிருந்து ஏதாவது ஐடியாக்கள் உதிரிந்து கொண்டே இருக்கும். அதில் ஒரு ஐடியா - எழுத்துக்கூடம்!

ரியாத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் ரியாத் வாழ் நண்பர்களில் எழுதுவதற்கு ஆர்வமுள்ளவர்கள், எழுத கற்றுக்கொடுக்கக்கூடியவர்கள், இலக்கிய ஆர்வலர்கள் இவர்களை ஒன்று கூட்டி ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறிய வட்டம். சுமார் ஓராண்டுகளுக்கு முன்னர் உருவாகி இன்று வரை பல ரியாத் இலக்கிய ரசிகர்களை ஆட்டிக்கொண்டிருக்கும் ஒரு உற்சாக பானம்!

ஒவ்வொரு மாதமும் மாதத்தின் முதல் மற்றும் மூன்றாவது வெள்ளிக் கிழமைகளில் மதியம் 3 முதல் 5:30 மணி வரை இலக்கிய ரசனை மீட்டிங் என்பது கட்டாயம் போதைதான்! இலக்கிய ரசிப்பு இருக்கும் இடத்தில் காழ்ப்பு இல்லை பொறாமை இல்லை நீ நான் போட்டி இல்லை - தமிழ் இலக்கியத்தின் ஜாம்பவான்களின் எழுத்துக்களை பற்றி தெரிந்து கொள்வதும் அவர்களது படைப்பினை அசைபோடுவதுமே நோக்கம். எழுத்துக்களை எழுதுவதற்கு முன் எழுதுபவர்களைப் படி என்பதே அடிப்படைப் பாடம்.

முதல் கூட்டம் குறித்து என்னிடம் குறிப்பில்லை. ஆனால் இரண்டாவது கூட்டம் முடிந்தவுடன் மறக்காமல் இதனைப் பற்றி எழுதிவிட வேண்டும், இல்லையெனில் பேசியதும் புரிந்ததும் காற்றில் பறந்துவிடும் என்று தோன்றியது. அந்தக் குறிப்பு இதோ:

*******
தேதி: பிப்ரவரி 18 2006
எழுத்துக்கூடத்தின் இரண்டாம் கூட்டம்

பிப்ரவரி மாதத்தில் கிளுகிளுக்கும் குளிர்காற்று ஆச்சரியப்படும் விதத்தில் அங்கிருந்தோர் அனைவரையும் தழுவிச்சென்று கொண்டிருந்தது. அது ஒரு மதியமும் மாலையும் கலந்த நேரம். நரகாசுரனை மரணிக்கச்செய்ய அப்படி ஒரு நேரத்தை தேர்ந்தெடுத்ததாக கதை உண்டு. ரியாத் தமிழ் சங்கம், சோம்பல் என்னும் அசுரனை அழித்து எழுத்தாளர்களை உருவாக்கத் தேர்ந்தெடுத்தெடுத்த வெள்ளிக்கிழமை, அலுவலகம் செல்லாத நாளின் ரியாத் நகரின் மயான அமைதியை அனுபவிக்கும் சுகத்தினை கெடுக்கக்கூடியதாக இருக்குமோ என்ற எண்ணம் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால், அந்த கூட்டம் முடிந்த பின்னர், கூட்டத்தில் பேசப்பட்ட பேச்சும் கருத்துக்களும் அப்படிப்பட்ட எண்ணங்களையே இல்லாமல் செய்துவிட்டிருந்ததுதான் உண்மை.

அன்றைய தினம் தலைப்பு ' எஸ்.ரா எழுதிய கதாவிலாசத்தின் இரண்டாம் கதாசிரியர், திரு. ஆ.மாதவன் அவர்கள் பற்றி. அழுத்தமாக ஏற்றத்தாழ்வுகளுடன் சுவாரஸ்யமாக அனுபவித்து படித்துக்கொண்டிருந்தார் நண்பரொருவர். ஆ.மாதவன் அவர்களைத்தேடி எஸ்.ரா பயணித்த விபரம் அந்த கட்டுரையில் முதலில் எழுதப்பட்டிருந்தது. திருவனந்தபுரத்தின் அந்த சாலையில் அப்படி ஒரு மனிதரை யாருமே அறிந்திருக்கவில்லையாம்! 'பாண்டியா' என்று கேட்டார்கள் என்று மட்டும் சொல்கிறார். பேச்சு இப்பொழுது 'பாண்டி' பற்றி திரும்பியிருந்தது. தமிழர்களை பாண்டியர்களாக்த்தான் திருவனந்தபுரத்தினர் குறிக்கிறார்கள் என்பது எனக்கு புதிய செய்தி. 'சோழியன் குடுமி சும்மா ஆடாது' என்ற பழமொழிக்கு இரண்டு அர்த்தங்கள் இருக்கக் கூடும். ஒன்று சோழியன் என்ற சோழி உருட்டும் ஜோசியக்காரரின் குடுமி காரணமில்லாம ஆடாது என்பதாகவும், மற்றொருந்து 'சோழ நாட்டி'னரின் குடுமி என்ற அர்த்தமும் இருந்திருக்கலாம். 'தஞ்சை குசும்பு' என்பதும், தஞ்சை வசவு நடை என்பதும் தனித்தன்மை வாய்ந்ததாக பேசப்படுவதுண்டு! கூடவே 'கொல்டி' என்று நாம் கூப்பிடுவதுபோலத்தானே அவர்களும், என்று தோழி ஒருவர் கூற, உண்மைதானே என்று எல்லோருக்கும் தோன்றியது!

எஸ்.ரா - வின் கதா விலாசத்தில், தெரிந்து கொள்ளவேண்டிய, எழுத்தார்வலர்கள் அறிந்து கொள்ள வேண்டிய விதயங்கள் நிறையவே இருக்கிறது. ஒரு எழுத்தாளரை வாசகர் தேடிச் செல்வது என்பதில் தவறில்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு தன்னம்பிக்கையும், எழுத்தார்வமும் நிரம்பிய, எழுதவும் தெரிந்துவிட்ட பலர் அதை ஒரு மேம்போக்காக மட்டுமே வைத்துக்கொள்வதென்பது இயல்பு. ஆனால், எஸ்.ரா இந்த கதாவிலாசப் பக்கங்களில் அவருடைய உணர்வுகளை அப்படியே பதிவு செய்திருக்கிறார். ஆ. மாதவனை தேடிக்கொண்டிருந்தவர், அவருடன் பேசிக்கொண்டிருக்கும் சந்தர்ப்பம் வாய்க்கும் போது, தேடி அலைந்ததை முகத்துக்கு நேர் சொல்ல கூச்சப்பட்டிருந்த அனுபவத்தை பதிவு செய்திருப்பது, அவரது அனுபவம் வாசகர்களை நேரடியாகச் சென்றடையும் உத்தியாகவும் மாறிவிடுகிறது. தன்னைப் பொருத்தி வைத்து பார்க்கும் வாசகனாக இந்த கட்டுரைகளை எஸ்.ரா எழுதியிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரியவருகிறது.

'கதாவிலாசம்' விமர்சன பாணியில் எழுதப்படாமல், ஒரு முன்னுரை, கதை, அனுபவத்துடனான முடிவு, எழுத்தாளர் குறிப்பு என்று வித்தியாசமான ரசனைப்பதிவாக எழுதப்பட்டதனால்தான், தொடர்ந்து வாசிப்பும், உள்வாங்குதலும், ரசிப்பும், விமர்சிப்புமாக அதனை அலச முடிகிறது!

வாசகனும் எழுத்தாளனும் சமதளத்தில் இருந்திட வேண்டும். அப்பொழுதுதான், எழுத்தாளன் சொல்வது வாசனை சரியான விதத்தில் 'ரீச்' ஆகும். 'பக்கிம் சந்திர'ரின் எழுத்துக்கள் புரியவில்லையே என்ற கேள்வி எழுப்பப்பட்ட போது, தாகூரின் பதில், 'அவர் எனக்காக எழுதுகிறார், நான் உனக்காக எழுதுகிறேன்' என்பதாக இருந்தது என்று தாகூரின் எடுத்துக்காட்டுடன் பேசிக்கொண்டிருந்தார் டாக்டர். அப்பாஸ் இப்ராஹிம்.

பேச்சு பல தளங்களில் பயணித்த வண்ணமிருந்தது. தோழி ஒருவர், பாலகுமாரன் எழுத்துக்களில் தெரிக்கும் காமம், ஜெயகாந்தனின் எழுத்துக்களில் தெரிவதில்லை என்பதாக கருத்து தெரிவித்தார். எனக்கு ஏற்புடையதாக இல்லை. பாலகுமாரன் 'செக்ஸ்' எழுதுகிறார் என்பது பலர் வைக்கும் சராசரி வாதம். ஆனால், பாலகுமாரன் எங்குமே அத்துமீறவில்லை என்பது என் கருத்து. கணவன் மனைவியிடையே உறவு என்பதும், நெருக்கம் என்பதையும் காட்டுவதற்கும், இன்னமும் சபையில் பேசமுடியாத ஏராளமான கருத்துக்களையும் தமிழ் எழுத்துக்களில் பாலகுமாரன் அளவுக்கு எவருமே பதிவு செய்ததில்லை என்பதும் மறுக்கமுடியாத உண்மை!

பேச்சு ஜெயகாந்தனின் 'சினிமாவுக்குப் போன சித்தாளு' பக்கம் சென்றது. எம்.ஜி.ஆர் படம் பார்த்து முயங்குவதற்கு ஒப்புக்கொள்ளும் பேதமையான காலகட்டத்தை சாடிய ஜெயகாந்தனின் எழுத்து மற்றும், அக்னிப்பிரவேசமாகி - சில நேரங்களில் சில மனிதர்களாக மாறி - கங்கை எங்கே போகிறாள் என்று திரிந்த ஜெயகாந்தனின் எழுத்து போன்றவை பேசப்பட்டது. அக்னிப்பிரவேசத்திற்கு வந்த எதிர்ப்புகளுக்கு பதிலடியாக
'நவகாளி' இளைஞர்கள் போன்ற 'வீரர்களை' நம்பித்தான் அந்த கதாநாயகியை நான் அக்னிப்பிரவேசம் செய்வித்தேன். உங்களைப் போல கோழைகளை நம்பியல்ல.' என்று சொல்லியதாகக் கேள்விப்பட்டபோது, 'ஜெயகாந்தன்' கதைகளை படிக்கும் போது ஏற்பட்ட அதே உணர்வு மீண்டுத் திரும்பியது. ஜெயகாந்தனின் கதைகள் இப்பொழுது படித்தாலும் கூட, கண்ணெதிரே நடப்பதாக, புரட்சியான கருத்துக்களாக, இந்த விநாடி வரை இப்படி எழுதக்கூடிய மாற்று எழுத்தாளர் இல்லையே என்ற எண்ணத்தை தோன்றும் படியாகத்தான் இருக்கின்றன.

தொடர்ந்து பேச்சு, பாலச்சந்தரின் திரைப்படங்கள் என்று வேறு பக்கம்
பயணித்தாலும், பாரதி சகாப்தத்தில் - பாரதியை மையமாக வைத்து, ஒரு புகழ்வாய்ந்த இலக்கியப்பரிசு உருவாக்கப்படவேண்டும் என்ற எண்ணத்தினை அனைவர் மனதிலும் விதைத்துவிட்டு எழுந்தார், எழுத்துக்கூடத்தின் மையமாக இருந்து நடத்திய டாக்டர். அப்பாஸ் இப்ராஹிம்.

கதா விலாசம் தவிர, வேறு ரசிக்கத்தக்க விபரங்களையும் படிக்கலாமே. கதாவிலாசம் படிக்கும் நேரம் குறுகியதாக மாறிவிடும்போது, தொடர்ந்து சிறந்த எழுத்தாளர்களின் எழுத்து நடையை அவதானித்துக்காட்டும் சிறுகதைகளையும் படிக்கலாமே என்ற எண்ணம் பளிச்சிட்டது.

கூட்டம் முடிந்து கூடத்திலிருந்து வெளியே வரும்போது, 'Barbe-Q' வாசனை மூக்கைத் துளைத்தது. சிறு பிரட்டலைத் தந்தது. இந்த வாசனை மெல்லியதாக கூட்ட நேரத்திலும் வந்திருக்கக்கூடும், ஆனால், 'செவிக்குணவு இல்லாதபோது' என்ற நிலை எங்களுக்கு வரவில்லையாதலால், அது உறுத்தலாக இல்லை போலும்'!

---------****---------

இனி வரும் வாரங்களில் எழுத்துக்கூடத்தின் வாரா வாரம் பேசப்பட்டவை குறித்த - மீட்டிங் மினிட்ஸ் - என் வலைப்பதிவுகளில் வெளிவரும்.
posted by சாகரன் @ 1/12/2007 04:09:00 AM   1 comments
Tuesday, January 09, 2007
ஐந்து(5) டிகிரி
ங்கேயே ஒரளவு சொல்லியிருந்தார்கள் என்றாலும், இறங்கும் நேரத்தில் காபினெட்டிலிருந்து அறிவிப்பு வந்த போதே தெரிந்து விட்டது இந்த வருடம் நிச்சயம் குளிர் அதிகம்தான் என்று. ஐந்து டிகிரி!

மேற்கூரை இல்லாத வீட்டில் இருப்பது போலத்தான் இருக்கிறது. அதிலும் இரண்டாவது மாடி. கார்னர் பிளாட். இரண்டு சன்னல் உள்ள அந்த ரூம்(ப்) பக்கமே போக முடியவில்லை! ஆசையாசையாய் நல்ல ரேட்ல கிடைக்குதுண்ணு செகண்ட் ஹேண்டில் வாங்கிய ஏ.சி யில் ஹீட்டர் போட்டால் - சுகமாக தென்றல் வீசுகிறது. போன முறை வாங்கி வைத்த ஆயில் ஹீட்டர் மட்டுமே ஏதோ கை கொடுக்கிறது.

குளிர்.. அதிலும் மத்திய கிழக்கு நாடுகளில் குளிர் சீசன். அனுபவிக்க வேண்டிய ஒன்று. வருடத்திற்கு வருடம் அதிகரிப்பதும் அதைப் பற்றி பேச வேண்டிய தேவை இருப்பதும் ஆச்சரியமாக இருக்கிறது.

பேச வேறெதுவும் இல்லை என்றால், நம்மூர்ப் பக்கங்களில் 'வெயில் இன்னிக்கு அதிகம் இல்ல' என்று பேச ஆரம்பிப்பார்கள். வருடா வருடம் அதே வெயில்தான் ஆனாலும் ஏனோ அன்றுதான் அதிகம் போல பேச்சு ஆரம்பிக்கும். எதிரில் இருப்பவரும் மறுத்தோ ஆதரித்தோ பேச ஆரம்பித்து நண்பர்களாக மாறி அவரவர் வேலை முடிந்த பின் பிரிந்து விடுவார்கள். வாய் மூட இயலாத ஒரு குணம் நம்மவருக்கு உண்டு. இதற்கு நான் மட்டும் விதிவிலக்கல்ல என்பது தெளிவாகத் தெரிந்தாலும் ஏனோ குளிர் அதிகம் என்பதைச் பேசாமல் இருக்கமுடியவில்லை!

*****

தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பது ஒரு தேசத்திற்குத் தவிர்க்க இயலாதது. வளர்ந்து வரும் சவுதி அரேபியா இன்னமும் உற்சாகமாக மாற்றங்களை எதிர்கொண்டுதான் வருகிறது.

சமீபத்திய புதிய மாற்றங்கள்: காலை 9 மணி முதல் மாலை 4:30 வரை மட்டுமே - அனைத்து வங்கிகளின் அலுவலகங்களும் திறந்திருக்கும் - லஞ்ச் பிரேக் கூட விடாமல். ததாவுல் - சவுதி ஸ்டாக் மார்க்கெட் - நேரமும் அதே!

எதிர்பார்க்கப்படும் புதிய மாற்றம்: தற்போதுள்ள வியாழன், வெள்ளி விடுமுறை என்பது மிக விரைவில் வெள்ளி, சனி விடுமுறை என்று மாற்றப்பட உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிலிருந்து செய்தி கசிகிறது. ஏற்கனவே பல மத்திய கிழக்கு நாடுகளில் இந்த மாற்றம் ஏற்படுத்தப்பட்டு விட்டது அறிந்ததே!

*****

வுதி அரேபிய மன்னரின் இந்திய விஜயத்தினை கொண்டாடும் பொருட்டு இந்திய அரசாங்கத்தின் ஆணைப்படி ஜனவரி 26 ம் தேதிவரை ஒரு வாரத்திற்கான கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுவருகின்றன. இது ரியாத் நகரத்தில் மட்டுமல்ல, ஜெத்தா, தமாம் போன்ற இடங்களிலும் என்று தெரிய வருகிறது. சவுதி வாழ் மக்களுக்கு இந்த மாசம் நிறையவே சுவாரஸ்யங்கள் இருக்கிறது! ஒரு வாரத்திற்கான கொண்டாட்டம் என்பது சாதாரண விசயமே அல்ல.., எல்லாம் முடிந்த பிறகு இவை பற்றி எழுதுகிறேன்.

*****

On Progress...

தமிழ் சினிமா பாடல்களின் வரிகள் - லிரிக்ஸ் - டேட்டாபேஸ் தேடிக்கொண்டிருக்கிறேன். ஒரு சிறிய நிகழ்ச்சிக்காக... Quick Answer from google: mohankumars.com
posted by சாகரன் @ 1/09/2007 10:35:00 AM   0 comments
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Last Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER