சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Sunday, February 04, 2007
Hats of to you madam! (or) குருவி படம்
நான் படித்த ஸ்கூலும் சரி, நான் படித்த கல்லூரியும் சரி இரண்டும் கோ-எடுகேஷன். எனவே எனக்கு எதிர் பாலாரிடம் பழகுவதில் என்றுமே தயக்கம் இருந்ததில்லை. நான் நன்றாக ப்ரீயாகப் பேசுவேன். இது என்னுடைய தாய்க்கு மிகுந்த கவலை தருவதாக இருந்தது. ஏன் உண்மையைச் சொன்னால் என்னைப் பலர் அப்பொழுது தவறாகவே நினைத்தார்கள். சகஜமாகப் பேசிப் பழகும் பெண்கள் மேல் இருக்கும் உலகின் சந்தேகப் பார்வை என் மீதும் இருந்தது.:-) தொடர்ந்து நான் முன்னேறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்கான நோக்கமும் எனக்குத் தெளிவாகவே இருந்தது.

எனக்கு பி.யூசி முடித்தவுடன் மருத்துவப் படிப்பிற்கான சீட் கிடைக்கவில்லை. அடுத்த ஒரு வருடத்திற்கு பி.எஸ்.ஸி பயோ கெமிஸ்ட்ரி கிளாசுக்கு போய் குருவிப் படம் போட்டுக்கொண்டிருந்தேன். ஆம், என் எண்ணமெல்லாம் எம்.பி.பி.எஸ் படிக்க வேண்டும் என்பதாகவே இருந்ததால், 'குருவி படமும்' 'கிளி படமும்தான்' என்னுடைய பயோ கெமிஸ்ட்ரி நோட்டுப் புத்தகங்களில் இருக்கும்! :-) கடவுள் கருணையால் அடுத்த வருடம் என்னுடைய கனவான எம்.பி.பி.எஸ் சீட் கிடைத்தது. அந்த நேரத்தில் நான் பெற்ற மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

நான் சர்ஜிகல் லைனில் செல்ல வேண்டுமென்று நினைத்திருந்தேன். என்னை விட ஒரு மதிப்பெண் குறைந்த மார்க் வாங்கிய மாணவரை சர்ஜிகலுக்கும் என்னை அனலிதிகலுக்கும் (?) அனுப்பி வைத்தார்கள். கேட்டதற்கு அவர் ஆண் என்பதால் சர்ஜிகல் அவருக்கு தந்திருப்பதாகச் சொன்னார்கள். இதற்காக நான் மிகவும் வருத்தப்பட்டேன். ஆனால் இன்று, நான் இந்த முடிவிற்காக மிகவும் மகிழ்கிறேன். ஏனென்றால் 'சர்ஜிகல்' என்ற வேலையின் ரெஸ்பான்ஸிபிலிட்டி மிக மிக அதிகம்.

இதன் பின்னர் என்னுடைய வாழ்க்கையின் மிக இனிமையான நிகழ்ச்சிகள் நடந்தன. என்னுடைய காதல் கணவருக்கு நான் 'யெஸ்' சொன்னேன்! உண்மையாகச் சொன்னால் பள்ளிக்கூட காலத்திலிருந்தே நானும் அவரைக் காதலித்துதான் வந்திருந்தேன்:-) ஆனால் என்றுமே சொல்லியது கிடையாது. இன்னும் கூட அவரிடம் 'இதெல்லாம் வேணாம் ஒழுங்கா படிப்பைப் பாருங்க' என்றெல்லாம் அட்வைஸ் கொடுத்திருக்கிறேன். 11 வருடங்கள் கழித்துதான் நானும் 'யெஸ்' என்பதைச் சொன்னேன். இன்று என் கணவன் மற்றும் மகனுடன் மிகவும் இனிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். என்னுடைய தினசரி வேலைகளில் இவர்கள் இருவரும் எனக்கு நிறைய உதவிகள் செய்கிறார்கள்.

இன்னும் இரண்டு மாதத்தில் என்னுடைய வீட்டில் மீண்டும் ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சி நடக்கப்போகிறது. என்னுடைய விருப்பப்படி ஒரு பெண் குழந்தையை அடாப்ட் செய்ய முடிவு செய்திருக்கிறேன். அனைத்து பார்மாலிட்டிகளும் முடிந்துவிட்டன. கடவுள் கருணையால் அந்தக் குழந்தையை நல்ல விதமாக வளர்க்க வேண்டும்.

என்னுடைய வாழ்க்கையின் குறிக்கோளான, 'மக்களுக்கு சர்வீஸ்' என்பதில் நான் ஓரளவுக்கு வெற்றி பெற்று விட்டேன். இனியுள்ள என் வாழ்க்கையின் குறிக்கோள் 'அனாதைக் குழந்தைகளுக்கான ஒரு இல்லம்' அமைத்து அவர்களுடைய வாழ்வில் முன்னேறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டுமென்பதுதான். இதற்காக என்னுடைய சம்பாத்தியத்தில் ஒரு பெரும் பகுதியை நான் சேமித்து வருகிறேன். என்னுடைய இந்தக் குறிக்கோளும் நிறைவேற இறைவன் துணை நிற்பான் என்று நம்புகிறேன்.

**

குடும்பத்தினையும் கவனித்து, பணியிலும் தெளிவாக இருந்து, வாழ்க்கையின் உயர்ந்த குறிக்கோள்களையும் சாதிக்கும் முயற்சியோடு வாழும் பெண்கள் இந்த உலகத்தின் உயிர் நாடிகள். டாக்டர் தஹ்சீன் சுல்தானா அவர்களுக்கு என் மனதார ஒரு 'ஹேட்ஸ் ஆப் டு யூ மேடம்' சொன்னேன்!

~~~**~~~

பிரபல பாடகர் ஒருவரின் கஜலும், பிரபல பேச்சாளரின் பட்டிமன்றமும் ஒரே தினத்தில் இங்கு நடந்தேறியது. நமது ரியாத் எழுத்துக்கூடத்தின் ஆஸ்தான கவிஞர்கள் இருவரும் பட்டிமன்றத்தில் பங்குபெற்று சிறப்பித்தது மகிழ்ச்சிக்குறிய விடயம்!

~~~**~~~

அவளுக்கு டான்ஸ் என்றால் கொள்ளை பிரியம். அவளுடைய அம்மாவும் டான்ஸர். டான்ஸ் என்றால் சாதாரணமாக இல்லை. பெல்லி டான்ஸ். இடுப்பை ஆட்டும் வேகத்தில் பார்ப்பவர் மனசும் சேர்ந்து ஆடும்! ஒரு பிரபல டான்ஸரிடம் சேர்கிறாள். கண் சரியாகத்தெரியாத ஆசிரியர் ஒருவருடன் பழகுகிறாள். அவள் வயதொத்த ஒரு இளைஞனைக் காதலிக்கிறாள்;கைபிடிக்கிறாள். ஆனால் கணவனுக்கு இவளது ஆடல் பிடிக்கவில்லை. தனக்காக மட்டுமே இவளது ஆடல் இருக்க வேண்டுமென நினைக்கிறான். இது சரியா? அவளால் ஒத்துக்கொள்ள இயலவில்லை. என்னுடைய கழுத்திற்குக் கீழ் இருக்கும் உடல் மட்டுமே உனது என்று கணவனிடம் ஒப்புக்கொடுக்கிறாள். பின்னர் ஒரு கட்டத்தில் விலகி வந்துவிடுகிறாள். இதற்குள் ஆசிரியருடனான இவளது பழக்கம் அதிகரிக்கிறது. ஆசிரியரின் அறிவில் மயங்குகிறாள். ஆசிரியர் ஒரு அரபி மொழி வித்துவர். 'காதல் காமம் இவையனைத்தும் அரபியின் பழைய இலக்கியங்களில் இருக்கும் போது இன்றைய காலத்தில் இதிலிருந்து ஒதுங்கியிருக்கச் சொல்வது தவறு' என்ற கோட்பாடுடையவர். இந்த சூழலிலிருந்து இலக்கியத்தை மீட்டெடுக்கவேண்டுமென்ற ஆர்வம் உடையவர். கதாநாயகி, ஆசிரியரின் கோட்பாடுகளால் கவரப்படுகிறாள். கிளிட்டோரஸ் அறுக்கப்படுமொரு இளம்பெண்ணிற்காக வேதனைப்படுகிறாள். ஒரு கட்டத்தில் ஆசிரியருடன் இணையவும் துணிகிறாள். அந்த இறுதி முயக்கத்திற்குப் பிறகு ஆடல் மட்டுமே அவளது வாழ்க்கையாகுகிறது. நீண்ட தூரத்திற்கு பாலைவனமாகத்தெரியும் ஒரு பாலைவனத்தின் மலையில் சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் அவளது ஆட்டம் தொடர்கிறது. திரை விழுகிறது.

- சென்னையில் பிலிம் பெஸ்டிவலில் பார்த்த ஒரு படத்தின் கதைச்சுருக்கம்.

~~~**~~~

சவுதி ஸ்டாக் மார்க்கெட் 6700 இண்டெக்ஸை தொட்டு விட்டு இப்பொழுதுதான் எழுந்து கொண்டிருக்கிறது. 10 மாதத்தில் 22ஆயிரத்திலிருந்து 6700 க்கு இண்டெக்ஸ் செல்லும் என்று எவரும் எண்ணியிருக்கக்கூட இயலாது.

'இன்னிக்கித்தான் ஊரிலேர்ந்து வந்தேன் மச்சி. ஒரு கம்பெனியில ஸ்டாக் வாங்கியிருந்தேன். இப்ப 3000 ரியால் மாட்டிகிட்டிருக்கு. ஆனா ஒரு சேஞ்சும் இல்லை. என்னன்னு கேட்டா கம்பெனியையே de-list பண்ணிட்டாங்க சொல்றாங்க. இப்ப என்ன பண்ணனும் தெரியலையே'

Labels: , , ,

posted by சாகரன் @ 2/04/2007 05:40:00 PM   0 comments
Tuesday, January 30, 2007
போட்டோ ப்ளே (Photo Play)
'சார் உங்க நகைச்சுவைப் பேச்சை என்னுடைய பதிவில் எழுதியிருக்கிறேன்' என்று அல்லாபதி சுப்ரமணியத்திடம் சொன்னேன். ஏனோ டென்ஷனானார். 'சார் அது நான் சொந்தமாக எழுதினது இல்லை சார். அதை எழுதினது மல்லாடி வெங்கட கிருஷ்ண மூர்த்தி. பிரபலமான எழுத்தாளர். சிருங்காரம்.காம் நடத்தி வருகிறார். அவருடைய தளத்திலிருந்த போட்டோ ப்ளே தான் நான் பேசியதன் மூலக்கதை. எந்த கிரெடிட்டாக இருந்தாலும் அவருக்கே சென்று சேர வேண்டும். தயவு செஞ்சு எழுதிடுங்க..'

"சரி சார், நான் எழுதிவிடுகிறேன்."

***

'ஹல்லோ பாஸ்.. உங்களுக்கு சுப்ரமணியம் தெரியும்ல. அவரு ஏதோ சிருங்காரம், போட்டோ ப்ளே அப்படின்னு சொன்னாரு. அது என்ன போட்டோ ப்ளே?'

'அது ஒண்ணும் பெரிய விசயம் இல்லைங்க. நடிகர்களை வைத்து போட்டோ எடுத்து காமிக்ஸ் போல கதை சொல்லும் டெக்னிக். அவ்வளவுதான்'

மல்லாடி வெங்கட கிருஷண மூர்த்தியின் 'சிருங்காரம்' தளம் நிசமாகவே சிருங்கார மணம் வீசுகிறது.

"என்னங்க இது... ஏதாவது போர்னோ கிராபி தளமா? "

"இல்லை இல்லை... ஆனால் நிச்சயமாக குழந்தைகளுக்கான தளம் இல்லை."

- இதுதான் பதிலாகக் கிடைத்தது. ஒரு வார்த்தை கூடத் தெரியாத 'சுந்தரத்' தெலுங்கில் தளம் இருந்தாலும். நல்ல வேளையாக போட்டோ பிளே தளத்தினை ஆங்கிலத்தில் அமைத்திருக்கிறார் மல்லாடி.

அந்தக் கதை: http://www.photoplayz.com/forsale/

ஒரு முறை கட்டாயம் பார்க்கலாம்! ஜஸ்ட் 36 ஸ்லைடில் அழகாக கதையைச் சொல்லியிருக்கிறார். (முந்தானை சரிய விட்டு தாராளமாக போஸ் கொடுக்கிறார்கள்! இதைத்தான் 'ரொமாண்டிக் ப்ளே' என்று சொல்கிறார்கள் போலிருக்கிறது! :-))

Labels: , , , ,

posted by சாகரன் @ 1/30/2007 05:51:00 PM   1 comments
Monday, January 29, 2007
டாம் அண்ட் ஜெர்ரி! (Tom & Jerry)
"அப்பா நான் ஜெர்ரி நீ டாம் ஓ.கே?......... ஒ.கே! இப்ப வரை சொல்றேன்."

ரோஸ்கலர் சிலேட். எழுதவும் ஓரமாகத் தூக்கினால் எழுத்து மறைந்துவிடுவதுமான அமைப்பு. நான் 'டாம்' படத்தின் முகத்தினை வரைய ஆரம்பித்திருந்தேன்.

".. இங்கப் பாரு வர்ணிக்காக்கு இருக்கில்லோ அதே மாதிரி ஹேர் வரையணும், ஓ.கே? "

"டாம்க்கு ஏது முடி? நோ கிடையாது."

"ச்சூ. உண்டு. நீ போடலைனா நான் பேசமாட்டேன் போ. உனக்கு சாக்லேட் தரமாட்டேன்.... குடு. நான் வரையிரேன் பாரு. "

என்னிடமிருந்து சிலேட்டை பிடுங்கினாள். டாம் படத்தின் தலையில் இரண்டு நீளமானக் கோடுகள் வரைந்தாள். பின்னர் உடம்பினை வேகமாகக் கோடு இழுத்தாள். அது டாம் படத்தின் வயிற்றினைக் கிழித்தது போல இருந்தது. சட்டென்று சிலேட்டின் முனையைப் பிடித்து தூக்கினாள். டாம் அழிந்தது.

"இப்ப ஜெர்ரி போடலாம். நான் தான் வரைவேன் ஓ.கே"

அவளின் பிடிவாதம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டுதான் இருக்கிறது. இன்று அவள் பள்ளியில் 'வொய்ட் டே'! அதாவது வெள்ளை ட்ரெஸ் அணிந்துவர வேண்டுமென்பது கட்டாயம். இப்படி மாதத்திற்கு ஏதாவது ஒரு கலர் ட்ரெஸ் டே உண்டு. வெள்ளைகலரில் அவள் சைசுக்கு சரியாக ஒரு சட்டை இருந்தது. ஆனால் போட மாட்டேன் என்று ஒரே அடம். ஏன்? அது பாய்ஸ் ட்ரெஸ்ஸாம். மூன்றரை வயதில் இந்தக் குழந்தைகளுக்கு இருக்கும் அறிவும் பிடிவாதமும் ஆச்சரியமானது!

"இதோ பாருடா, இதெல்லாம் பாய்ஸ் ட்ரெஸ் கிடையாது. எல்லாரும் போடலாம். அம்மா கூட சட்டை வச்சிருக்கேன் பாரு " - அவளுடைய அம்மா எவ்வளவோ முயற்சி செய்தும் அழுது அடம் பிடித்துக்கொண்டிருந்தாள். கடைசியில் ஜெயித்ததும் அவள்தான். இன்று ஸ்கூலுக்கு மட்டம்!

*****

எங்களூரில் ஒரு நண்பர் இருந்தார். பெயர் ஞாபகம் இல்லை. இரண்டு மாதத்திற்கு ஒரு முறை முத்து முத்தான் கையெழுத்தில் அழகாக படம் வரைந்து போட்டோ ஒட்டி ஒரு கையெழுத்துப் பிரதி வரும். கருத்துக்கள் எழுதுவதற்காக கடைசி ஆறு பக்கங்கள் வெள்ளையாக விடப்பட்டிருக்கும். ஒரு முறை தன்னுடைய சுய சரிதத்தை தொடராக எழுதியிருந்ததைப் படித்தேன். நெட்டையனுடனும், காத்தமுத்துவுடனும் இணைந்து ஆத்தங்கரைத் தோட்டத்தில் ஏறிக்குதித்து தென்னையை பறித்து தின்றதும், அதில் மாட்டிக்கொண்டதும் என்பதாக சுவாரசியமாக(?) ரசித்து எழுதியிருந்தார். இன்றைய நிலையில் கண்டுகொள்ளாமல் விட்டிருப்பேன், ஆனால் அன்றோ எனக்கும் இது போன்ற பயணக்கட்டுரைகள் சுயபுராணங்களில் ஆர்வமிருந்தது. நிறைய படித்து கருத்து சொல்லும் வேகம் இருந்தது. பத்திரிக்கைகளுக்கு 15 பைசா போஸ்ட் கார்டில் விமர்சனம் அனுப்பும் பழக்கம் இருந்தது. அதனால் கடைசி பக்கத்தில், 'உங்கள் சுயசரிதை யாருக்கு என்ன பிரயோசனம்? உருப்படியாக ஏதேனும் எழுதுங்கள்!' என்பது போல ஏதோ எழுதிவிட்டு வந்துவிட்டேன்.

அடுத்த நாள் நான் யார் என்று விசாரித்திருக்கிறார் போலும். அடுத்த பிரதியில் தலைப்பு இப்படி வந்தது 'பிள்ளைத்தெரு கல்யாணராமனுக்கு பதில் மடல்' - இரண்டு பக்கங்களுக்கு, 'தான் ஏன் சுயசரிதை எழுதக்கூடாது? எந்த விதத்தில் தகுதி குறைந்துவிட்டது' என்று கேட்டு என்னென்னமோ எழுதியிருந்தார். காந்தி பூங்கா அருகில் என்னை சைக்கிளில் மடக்கி புத்தகத்தைக் கொடுத்து, படித்துவிட்டுத் திரும்பக் கொடுங்கள் என்று சொன்னார்.

அதற்குப் பிறகு நல்ல நண்பராகிவிட்டார். பார்க்கும் போதெல்லாம், தமிழரசியில் வந்து கொண்டிருந்த 'திருப்பூந்துருத்தி'யைப் பற்றியும், பொள்ளாச்சி நசன் குறித்தும், ஜெராக்ஸ் எடுத்து வெளிவரும் தனிச்சுற்று பத்திரிக்கைகளை பற்றியும் எங்கள் விவாதம் விரியும். பிற்காலத்தில் ஏதோ ஒரு பிரபல நாளிதழில் இணைந்துவிட்டதாகக் கேள்வி. கையெழுத்துப் பிரதி நடத்தும் பெரும்பாலான நண்பர்கள் ஊடகத்துறையில் தொடர்ந்து இருக்கத்தான் செய்கிறார்கள்.

*****

இந்தவாரத்தின் டோஸ்ட் மாஸ்டரில் நண்பர் அறவாழி அருமையான ஒரு சிறு பத்திரிக்கையை உருவாக்கியிருந்தார். அழகான லே அவுட். இதுதான் முதல் முறை இப்படி உருவாக்கியது என்று சொன்னது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதை விட இப்படி ஒன்றைச் செய்ய வேண்டுமானால் டெடிகேசன் மற்றும் ஆர்வம் இரண்டும் வேண்டும். வாழ்க!

*****

மக்கள் டிவி, தமிழன் டிவி, வின் டிவி - இந்த மூன்று சேனல்களும் இப்பொழுது சவுதியில் இலவசமாக வருகின்றன. இன்சாட் 2சி டைரக்ஷனில் ஆண்டெனாவைத் திருப்பி வைத்து ட்யூன் செய்தால் கூடவே கைரலி, ஏசியா நெட்,ஜீவன் டீவி ஆகிய மலையாளச் சேனல்களும் கிடைக்கின்றன.

இந்தத் தமிழ் டி.விகள் இன்னும் எனக்கு முழுமையாகப் பரிச்சயமாகவில்லை. மக்கள் டி.வியில் அடிக்கடி செய்திகள் ஒலிபரப்பாவதாகவும், தமிழன் மற்றுமொரு ஜல்லியாகவும், வின் - என்ன செய்கிறார்கள் என்பதே தெரியாத குழப்பமாகவும் இருப்பதாக இப்போதைக்குத் தோன்றுகிறது. அதே நேரத்தில் மலையாளச்சேனல்கள் இசைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஆச்சரியமாக இருக்கிறது. எந்த நேரம் திருப்பினாலும் ஏதாவது ஒரு சேனலில் யாராவது ஒரு பாடகரின் பாட்டோ பேட்டியோ ஓடிக்கொண்டிருக்கிறது!
posted by சாகரன் @ 1/29/2007 06:41:00 PM   4 comments
Saturday, January 27, 2007
எழுத்துக்கூடத்தின் 19வது சந்திப்பு - நகுலன் (Writer Nagulan)
நகுலனின் எழுத்தில் தோல்விதான் முக்கிய அனுபவம். நான் தோல்வி என்று குறிப்பிடுவது இலக்கிய தோல்வியை அல்ல. நகுலனின் அந்தரங்க தோல்வியும் அல்ல. சூழலை ஒரு நாடகமாக, ஏதோவொன்றை சுட்டி இன்னொன்றுக்கு காரணமாக்கும் வினோத தர்க்க முறையை ஒரு மனம் இயக்கமின்மையிலிருந்து உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது.

ஏனெனில்

'யாருமற்ற இடத்தில்

என்ன நடக்கிறது

எல்லாம் '

நான் இல்லாத இடம் யாருமற்ற இடம்தானே. அங்கு எல்லாமும் தானே நடக்கும். அந்த இடத்திற்கு நகுலனால் போக முடியாது. இதுதான் நகுலன் தரும் அனுபவம். நீங்களும் நானும் போகாத இடத்தில் என்ன நடக்கிறது. எல்லாம். இந்த இயல்புதான் நகுலனின் வசீகரம். - சங்கர ராம சுப்ரமணியன்
நன்றி : திண்ணை
~~*~~

தமிழில் கம்பன், திருத்தக்க தேவரிலிருந்து தான் ஓசை, சந்தம் கூடி வருகிறது. சங்கப் பாடல்களிலெல்லாம் இன்னர் ரிதம்தான் இருக்கிறது. இந்த இன்னர் ரிதம்தான் நகுலன், பிரமிளிடமும் இருக்கிறது.திரும்பத் திரும்ப இவர்களைச் சொல்லிக் கொண்டிருக்கக் காரணம், இவர்கள் கவிதைக் கட்டமைப்பிலும், விஷயத் தெரிவுகளிலும் சங்க மரபு சார்ந்து வருகிறார்கள். பழைய கவிதையாகயிருக்கிறது; அதே சமயத்தில் இன்றைய வாழ்க்கையை, இன்றையப் பிரச்சினைகளை, இன்றைய மனோபாவங்களை எடுத்துச் சொல்வதால் முழுக்க முழுக்க நவீன கவிதையாகவும் இருக்கிறது.
...........
ஒருவேளை கவிஞர் என்று சொன்னால் 'எழுத்து' அமைப்பில் நகுலன் ஒருவர்தான் கவிஞர். - கவிஞர் விக்ரமாதித்தன் - நன்றி: ஆறாம் திணை.
http://www.aaraamthinai.com/interview/2004/july10vikramathithyan.asp

“எழுத்து” காலகட்டம் பற்றி தெரிந்து கொள்ள...
http://thaaragai.wordpress.com/2006/05/05/pudhukkavithai2/

~~*~~


"என்னைப் பெற்றது நான்தான் "

நகுலனை சந்தித்த போது இதைச் சொல்லி அவரைப்படம் பிடித்துக் கொண்டிருந்த இயக்குனர் அருண்மொழியிடம் அதற்கு அர்த்தம் என்ன என்று கேட்டார். அருண் மொழி சொன்ன விளக்கம் அவருக்குத் திருப்தி தராதது போல பார்த்துக் கொண்டிருந்தார். நான்கு நாள் இடைவெளிக்குப் பின் "செவ்வகம்" ஆசிரியர் விஸ்வாமித்திரனுடன் சந்தித்தபோது நகுலன் விஸ்வாமித்திரனிடம் அதே கவிதையைச் சொல்லி இதற்கு அர்த்தம் என்ன என்றார். அவர் ஒருவனின் ஆளுமையும், வாழ்மனச் சூழலும் அவனின் வாசிப்பு, அவனைச்சுற்றி உள்ல்ளவர்களால் உருவாக்கப்படுவது பற்றிச் சொன்னார். நகுலன் ஓரளவு திருப்தி அடைந்தவர் போல் புன்னகைத்தார். அதைத் தொடர்ந்து அவர் கோள்விகளை கேட்டார். பெரும்பாலும் பதில்களாக அவை அமையாமல் கேள்விகளாகவே அமைந்திருந்தன. " இது ஒரு வகை ஜென் தன்மையானது கேட்கிற கேள்விகளுக்கு பதில்களை சொல்லாமல் அதனை ஒட்டி கேள்விகளை கேட்டுக்கொண்டிருப்பது " என்றார் விஸ்வாமித்திரன்.

2005ம் ஆண்டு வங்காளிகளின் படங்களை முன் வைத்து... - சுப்ரபாரதிமணியன் நன்றி: பதிவுகள்

~~*~~
நகுலன் தமிழ் நவீன எழுத்தின் முன்னோடிக் கவிஞர். கதையாசிரியர். திருவனந்தபுரத்தில் வாழ்ந்து கொண்டு வருகிறார். எண்பது வயது தாண்டிவிட்டது. சாகித்ய அகாதமி, ஞானபீடம் உள்ளிட்ட எந்தப் பரிசையும் பெறாதவர் என்பது அவரது தனிச்சிறப்பு. அவரது கதையுலகம் மிகவும் தனித்துவமானது . எட்டு வயதுப் பெண்குழந்தையும் நவீன மலையாளக்கவிதையும் என்றொரு சிறுகதை எழுதியிருக்கிறார். .......

நன்றி: எஸ்.ரா, அட்சரம்.

~~*~~

படிக்க ஒரு கட்டுரை : http://subramesh.blogspot.com/2005/05/blog-post_111624109063459058.html

~~*~~
புனைவு என்ற நிலையில் இயங்கும் மனம், தத்துவங்களை/அதுரீதியிலான ஒரு சாரத்தை எப்படிக் கையாள்கிறதென்று பார்க்கையில் ஜெயமோகன், சுந்தர ராமசாமி போன்றவர்களை ஒரு துருவத்தில் வைத்தால் நகுலன் போன்றவர்களின் எழுத்துக்கள் தானாக மறு துருவத்தில் பதிந்துகொண்டுவிடுகின்றன.

- சன்னாசி (http://dystocia.weblogs.us/archives/182 or MyDump)


எழுத்துக்கூடத்தின் 19ம் கூட்டம்: நகுலன் ஒரு அறிமுகம்.
- 26/01/2006

நீண்ட நாட்கள் கழித்துக் கூடும் கூட்டம் இது. சுமார் இரண்டு மாதங்கள் விடுப்பு முடித்து பெரும்பாலானவர்கள் பணிக்குத் திரும்பியிருந்தனராதலால் மீண்டும் ஒரு புது உத்வேகத்துடன் எழுத்துக்கூடக் கூட்டங்களைத் தொடரும் பொருட்டு இந்த வாரமே ஆரம்பிக்க முடிவு செய்திருந்தனர். குடியரசு தினம் - காலையில் இந்திய தூதரகத்தில் கொண்டாடப்பட்டதாகவும், கூட்டம் இந்த முறை அதிகமாக இருந்ததாகவும் கலந்து கொண்ட நண்பரொருவர் காதைக் கடித்தார்.

இந்த வாரக் கூட்டத்தில் வழக்கம் போல - எஸ்.ராவின் 'கதா விலாசம்' முதலில் எடுத்துக்கொள்ளப்பட்டது. நகுலன். எடுத்துப் பிரிக்கும் வரை நகுலன் பற்றி நான் அறிந்தது மிகக் குறைவு. வழக்கமாக அடுத்த வாரம் யார் என்பது முன்னரே தெரியும் என்பதால் கொஞ்சம் பிரிபரேசன் இருக்கும். அது இந்த வாரம் மிஸ்ஸிங்க்! நகுலனை எஸ்.ரா சந்தித்ததும், அதில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களும் ஆச்சரியத்தில் ஆழ்த்தின. அதன் பின்னர் இணையத்தில் வந்து செய்த சிறு ஆராய்ச்சிதான் மேலே பார்க்கும் சிறு கோட்டுகள். இணையத்தில் சிறு துழாவலிலேயே இவ்வளவு தூரம் எடுக்க முடிந்தது கொஞ்சம் பெரிய விசயம் தான். முந்தைய கதாவிலாசங்களில் படிந்த பெரும்பாலான எழுத்தாளர்கள் குறித்து என்னால் அதிகம் கண்டுபிடிக்க முடிந்ததில்லை:-(

"திருவனந்தபுரத்தில் அவரது வீடு, கௌடியார் என்ற பகுதியில் இருக்கிறது. நான் பார்க்கச் சென்ற நாட்களில், அவரது 'நாய்கள்' என்ற நாவல் வெளியாகியிருந்தது. 'நாய்களைப் பற்றி ஒருவர் நாவல் எழுதியிருக்கிறாரே!' என்று ஆச்சரியத்துடன் அதை வாசிக்கத் துவங்கினேன். நாவலில் ஓர் உருவகமாக, நாய் என்ற படிமத்தைப் பயன்படுத்தி இருந்தார்."


படிமம் - ? படிமம் என்றால்...? மாடல்? ப்ரோட்டோ டைப்?

நகுலன் திருமணம் செய்துகொள்ளாதவர். ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி, ஓய்வுபெற்று தனிமையில் வாழ்பவர். அவருக்குள்ள ஒரே துணை ஒரு பூனை மட்டும்தான்!

அவர் கட்டிலின் அருகில் வந்து, பூனை சுருண்டு படுத்துக்கொண்டது. அவர் பூனையைப் பார்த்தபடியே, ‘நான் என் பூனைக்குப் பெயரே வைக்கவில்லை. அது ஏதாவது ஃபீல் பண்ணுமா?’ என்று கேட்டார். எனக்கு எப்படிப் பதில் சொல்வது என்றே புரியவில்லை. நான் அமைதியாக, ‘பூனையை எப்படிக் கூப்பிடுவீர்கள்?’ என்று கேட்டேன். ‘பூனையைப் பூனை என்றுதான் கூப்பிடுவேன். அதுதானே சரியான முறை?’ என்றார்.
இந்த உரையாடலை வேற்று மனிதன் யாராவது கேட்டால், என்ன இது பிதற்றல்? என நினைப்பான். ஆனால், அதுதான் நகுலன்!

ஆழமான கேள்விகள். வயதானவர்கள் பலர் விதண்டாவாதம் செய்வதுண்டு. அதே போலத்தான் என்று தோன்றலாம். ஆனால் எஸ்.ரா சொல்கிறார்...

நகுலன் தன்னைத் தேடி வருபவர்களோடு கொள்ளும் உறவு விசித்திரமானது. சந்தித்த மறு நிமிடமே, ஒரு குழந்தையைப் போல ஏதேதோ கேட்கத் துவங்கிவிடுவார். அது ஒருவிதமான நட்பாக வளர்ந்து செல்லும். அவரது பரிகாசமும் ஒவ்வொன்றின் மீது அவர் எழுப்பும் கேள்விகளும் குழந்தைகளைப் போலவே விசித்திரமானதும் ஆழமானதும் ஆகும். உலகின் மீதான அவரது வியப்பும் ஈடுபாடும் தர்க்கங்களை மீறியது.

~~*~~

திரும்பவும் மாலையில் நான் சென்றபோது, காலையில் கேட்ட கேள்விகளையே மறுபடி கேட்டார்.
‘நீங்கதானே ராமகிருஷ்ணன்?’
‘ஆமாம்!’
‘அப்போ, காலையில் 'ராமகிருஷ் ணன்' னு ஒருத்தர் வந்திருந்தாரே, அவர் உங்களுக்குத் தெரிந்தவரா?’ ‘ஓரளவுக்குத் தெரியும்’ என்றேன். நகுலனின் சிரிப்பு பீறிட்டது. ‘அப்போது அவரிடம் பேசிக்கொண்டு இருந்ததை உங்களிடமும் பேசலாம், இல்லையா?' என்று கேட்டார். உரையாடலைத் தத்துவத்தின் உயர்ந்த நிலைகளை நோக்கி நகர்த்திப் போகும் கலை அவருக்கே உரியது.
ஒரு நாள் முழுவதும் நகுலனோடு இருந்தேன். மாலை, நானும் அவரும் திருவனந்தபுரம் சாலையில் நடந்து சென்றோம். அவர் அழகான இளம்பெண் ஒருத்தியைக் காட்டி, 'இவள் அழகாக இருக்கிறாளா?' என்று கேட்டார். மிக அழகாக இருப்பதாகச் சொன்னேன். அவர், 'கண்ணில் பார்த்தாலே அழகு தெரிந்துவிடுகிறது, இல்லையா? அது எப்படி சார்?' என்று கேட்டார். என்ன சொல்வதென்றே தெரியவில்லை.


அடேங்கப்பா.. நிஜமாகவே இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்ல முடியும்?! ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் அழகு என்று சொல்ல எப்படி முடிகிறது?!!

ஒரு முறை நகுலன் தன் வீட்டின் வாசலில் உட்கார்ந்தபடி, சாலையில் போகிறவர்களுக்குக் கையசைத்துக்கொண்டு இருந்தார். பள்ளிச் சிறுவர்கள் சிலர் கையசைத்துப் போனார்கள். அவர் கையசைத்தபடியே என்னிடம் கேட்டார்...
‘நான் இறந்துபோன பிறகு, இந்த வீட்டில் கை காட்டும் கிழவன் ஒருவன் இருந்தான் என்று குழந்தைகள் நினைப் பார்கள், இல்லையா? அதற்குத்தான் கையசைக்கிறேன்’ என்றார். இந்த ஆதங்கத்தின் கீழ் இருந்த துக்கம், ஒரு தேளின் விஷக்கடுப்பைப் போல என் உடலெங்கும் தாக்கியது.

இதைப் படிக்கும் போது எழுத்துக்கூடத்தில் இருந்த நண்பர்கள் அனைவரும் கிட்டத்தட்ட இந்த உணர்ச்சியைப் பெற்றிருப்பார்கள் என்று நம்புகிறேன். தன்னை வெளிப்படுத்தத் துடிக்கும் இயல்பு உலகில் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. இலக்கியம், படைப்பு அனைத்துமே தன்னை கால காலத்திற்கும் நிலை நிறுத்திக்கொள்ளத் துடிக்கும் துடிப்புதான். 'தேடிச் சோறு தின்று... ' பாரதியை ஏனோ நினைவு கூர்ந்தார் நண்பரொருவர்.

சில வாரங்களுக்கு முன் வந்த விகடன் கட்டுரையை நினைவுகூர்ந்தார் வேறொருவர்.

‘‘நான் இறந்த பிறகு எனக்கு அஞ்சலிக் கூட்டங்கள் நடத்த வேண்டாம். ஏனென்றால், என்னால் வர முடியாது!’’ (விகடன் or உமாசரண்)


எஸ்.ரா எழுத்தார்வலர்களுக்கு முத்தாய்ப்பாக ஒன்றைச் சொல்கிறார்:

"பெரிய கத்தியைத் தேர்ந்தெடுக்கிறாயா, இல்லை, சிறிய கத்தியைத் தேர்ந்தெடுக்கிறாயா என்பது முக்கியம் இல்லை. எதிரியின் இதயத்துக்கும் உன் கத்தி முனைக்கும் உள்ள இடைவெளி எவ்வளவு இருக்கிறது என்பதுதான் முக்கியம்" என்று யுத்த சாஸ்திரம் கூறுகிறது. அந்த நூலை எழுதியவன் ஒரு பௌத்த பிக்கு. ஒருவகை யில் இதுதான் எழுத்தின் ரகசியம். இதைக் கற்றுத் தருபவன், கதையை எழுதியவன் இல்லை. மாறாக, ஒரு நாடோடி. கற்றுக் கொள்வதற்கு ஆசானை விடவும் மனம்தான் முக்கியமாகத் தேவைப்படுகிறது. மனதைக் குழந்தையைப் போல வைத்துக்கொள்வது எளிதானதா என்ன?

முழுமையான எஸ்.ரா.வின் கதாவிலாசம் கட்டுரையைப் படிக்க:
http://www.vikatan.com/av/2005/may/22052005/av0602.asp (or) http://e-arc.blogspot.com/2005/06/blog-post_111997277395514514.html

***********

நகுலன் கவிதைகள் குறித்தான சில அலசல்கள் நண்பர்களால் முன் வைக்கப்பட்டன. அவரது கவிதைகள் தரும் தத்துவ விசாரங்கள் குறித்த பகிர்வு தொடர்ந்தது. சின்னச் சின்ன வரிகளில் எத்துணை ஆழம். கூடிய சீக்கிரம் நகுலன் புத்தகங்கள் வாங்கி வரச் செய்து ரியாத் தமிழ்ச்சங்கம் "அறிவுக்கூடம்" மூலமாக படிக்க வழி வகை செய்தால் நன்றாக இருக்கும்! :-)


இதன் தொடர்ச்சியாக "தமிழில் தாக்கம் ஏற்படுத்திய தலைசிறந்த பத்து தமிழர்கள்." வரிசையில் சங்க இலக்கியம் குறித்த சுமார் 20 நிமிடச் சொற்பொழிவு டாக்டர். மாசிலாமணி ஐயா அவர்களால் நிகழ்த்தப்பட்டது. முதல் தமிழராகத் "தொல்காப்பியர்" குறித்து சென்ற முறை பேசியிருந்தார். இந்த முறை அவர் பேசிய அனைத்தையும் ஓரளவுக்கு குறிப்பெடுத்தேன். இந்தக் குறிப்புகளை கூடிய விரைவில் ஒரு தனிக்கட்டுரையாகப் பதிக்க வேணும்! [வழக்கமாக எழுத்துக்கூட சந்திப்புகளைப் பதிவு செய்யும் கவிஞர்கள் இருவரும் கதாவிலாசம் பார்ட் முடிந்தவுடனேயே அடுத்த வாரம் நடக்க இருக்கும் பட்டிமன்றத்திற்காக எஸ்கேப்பாயிபதே ஆகியிருந்தார்கள்! :-)]

******

என்னத்தான் இருந்தாலும், பழசினை எழுதுவது அவ்வளவு சுவாரசியமானது இல்லையே! ஏற்கனவே நடந்த கூட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்ள 'ரியாத் தமிழ்ச்சங்கத்தின் எழுத்துக்கூடம்' தளத்தினைப் பாருங்கள்.


******

அடுத்த வார எழுத்துக்கூடம்: 2ம் தேதி வெள்ளிக்கிழமை. தெரிந்து கொள்ளப்பட இருக்கும் எழுத்தாளர்: ஜி.நாகராஜன்
posted by சாகரன் @ 1/27/2007 08:07:00 PM   2 comments
Thursday, January 25, 2007
Why N73 is better than K800
சோனி எரிக்சன் கே. 800 ம் சரி, நோக்கியா என். 73 ம் சரி இரண்டுமே மிகச் சிறப்பான மாடல்கள். இவற்றைக் குறித்த ஒரு ஒப்பீடு.







Sony Ericsson K800 Nokia N73
3.2 மெகா பிக்ஸல் சைபர்ஷாட் கேமரா வித் பிளாஷ் 3.2 மெ.பி கார்ல் சூயிஸ் லென்ஸ் கேமரா வித் பிளாஷ்
1000 போன் புக் அள்வில்லை
3G சப்போர்ட் ஆம்
ஜாவா, எப்.எம் ரேடியோ, எம்.பி.3 பிளேயர் ஆம்
பேச்சு மெமோ, டயல், ஹான்ஸ்ப்ரீ(Loud Speaker) அதே!
விபரங்கள் விபரங்கள்


இப்படி இரண்டும் ஒன்றுக்கொன்று ஒரே விதத்தில் இருந்தால், அப்புறம் என்ன வித்தியாசம்? ரொம்ப முக்கியமாக சில விசயங்கள் இருக்கின்றன! அவற்றைப் பற்றி கொஞ்சம் பார்க்கலாம்...

பேட்டரி - ரொம்ப முக்கியமான விசயம். பாதி போன் பேசும்போது, பேட்டரி இல்லாம திண்டாடியிருக்கிறீர்களா? நம்மில் பலருக்கு அடிக்கடி நடப்பதுதான் இது. எனவே திறனுள்ள பேட்டரியை கவனிக்க வேண்டியது அவசியமாகிறது. சோனி எர்க்ஸன் - லித்தியம் பேட்டரி - 900 mAh, அதே நேரத்தில் நோக்கியா 1100 mAh. இருப்பதிலேயே அதிக திறனுள்ள பேட்டரியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்.73 யில்.

போன் மென்பொருள்: சோனி எரிக்ஸன் - ப்ரொபரைட்டரி போன் சாப்ட்வேர். அதாவது போனினுடைய செயல்பாட்டினை அதிகரிக்க முடியாது. நோக்கியா - சிம்பயான் ஆப்பரேட்டிங் சிஸ்டம்(Symbian Operating System). மென்பொருட்களை நிறுவுவதன் மூலம் நீங்கள் போனை எப்படி வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். இது கிட்டத்தட்ட் ஒரு மினி கம்ப்யூட்டர். இதன் குறை, ஒரு வேளை தவறான மென்பொருளை நிறுவுவதன் மூலம் தொலைபேசியை தொல்லைக்குட்படுத்த முடியும். உதா: வைரஸ் போல. சில வருடங்கள் உபயோகத்திற்குப் பிறகு போனின் திறன் குறையக்கூடும். (என்னுடைய முந்தைய 6600 ஒன்றரை வருட உபயோகத்திற்குப் பிறகு ஒலியின் அளவு குறையத் துவங்கி விட்டது.)

காமராவைப் பற்றி: ரொம்ப முக்கியமாக - சோனி எரிக்ஸன் - முழுமையான 3.2 எம்.பி. சைபர் ஷாட் கேமராவிற்குரிய அனைத்து திறனையும் கொண்டுள்ளது. ஆனால். க்வாலிட்டி? பெரும்பாலான போட்டோக்கள் அதிக வெளிர்ப்புடன் வருகின்றன. எக்ஸ்போசர், வொயிட் பேலன்ஸ் முதலியவை சரி செய்ய மிகவும் பிரயத்னப்பட வேண்டியிருக்கிறது. பிளாஷ் - இதன் பெரிய ப்ளஸ். நீண்ட தூரம் வரை பாய்கிறது. அதே சமய்த்தில் மைனஸ் பாயிண்டும் இதே. அருகிலுள்ள இடத்திற்குக் கூட அதிக அளவில் ஒளியைப் பாய்ச்சி, படத்தினை சரியாகத் தெரியாமல் செய்கிறது.

நோக்கியா - போட்டோ குவாலிட்டி அருமை. ஆட்டோ போகஸ், லென்ஸின் (Carl Zeiss) துல்லியம் . இவை சிறப்பாக இருக்கின்றன. எல்லாவற்றையும் விட, அந்த பெரிய திரை(ஸ்கிரீன்)யில் பார்க்க மிக நன்றாக இருக்கிறது.

~~~~~~~~~~~
பெட்டிச் செய்தி:

சோனி எர்க்ஸன் - பிளாகருடன் கை கோர்த்துக்கொண்டு, 'பிக்சர் பிளாகிங்' சேவை தந்திருக்கிறார்கள். 'ஜஸ்ட் லைக் தட்' ஒரு போட்டோ எடுத்து, 'பிளாக் திஸ் (Blog this)' என்று சொன்னாலே போதும். ரைட் ராயலாக உங்கள் வலைப்பதிவில் வந்து உட்கார்ந்துவிடும். சமீபத்தில் டோஸ்ட் மாஸ்டர் மீட்டிங்கில் நான் வலைப்பதிவு பற்றி ஒரு பிரசண்டேஷன் கொடுக்கும் போது, இந்த போனை உபயோகித்து டோஸ்ட் மாஸ்டர் மீட்டிங் போட்டோவினை வலையில் இட்டுக் காட்டினேன். குறை: போட்டோவின் குவாலிட்டி மிக மிகக் குறைவு.

நோக்கியா - பிளிக்கர் - தளத்துடன் கை கோத்திருக்கிறார்கள். நீங்கள் எடுக்கும் போட்டோ, பிளிக்கர் தளத்தில் உள்ள போட்டோ ஆல்பத்தில் சென்று ஜம்மென்று ஐக்கியமாகி விடுகிறது.

பை.த.வே - பிளாகர் தன்னுடைய மொபைல் வலைப்பதிவு சேவையை மிக மிகச் சுலபமாக்கியிருக்கிறது. ஒரு எம்.எம்.எஸ் போட்டோ எடுத்து, go@blogger.com என்று அனுப்பினால் போதும். உங்களுக்கே உங்களுக்காக உடனடியாக ஒரு அக்கவுண்ட் கிரியேட் செய்து உங்களுடைய படத்தினையும் காண்பித்துவிடுகிறது. லவ்லி!
~~~~~~~~~~~

நோக்கியாவில் - அவுட்லுக்(Outlook) போன்ற மென்பொருட்களுடன் காண்டாக்ட்ஸ் (contacts) சிங்க்ரோனைசேசன் (synchronization) செய்ய முடியும். சோனி எரிக்ஸன் அப்படி அல்ல. அதைத் தவிர, பி.டி.எப், வேர்ட், எக்ஸெல் போன்ற டாக்குமெண்ட்களை பார்க்கும் வசதியும் நோக்கியாவில் உண்டு.


மொத்தத்தில் - நோக்கியா என்.73, சோனி எரிக்ஸனை விட சிறப்பான ஒரு மாடல். உங்களுடைய தேவை அதிகமில்லை என்றால் தாராளமாக கே.800 போகலாம். ஆனால், நீங்கள் உங்கள் போனிலிருந்து அதிகம் எதிர்பார்க்கிறீர்கள் என்றால் என். 73க்கு ஒரு 'க்ளோஸ் லுக்' கொடுங்கள்!

டிப்: கூடவே என்80 ஐயும் ஒரு பார்வை பார்த்து வையுங்க. மிக முக்கிய வித்தியாசம் வைபை (wifi) - வயர்லெஸ் லான் - இருக்கிறது. குறை: பேட்டரி, கேமராவின் சில நுண்ணிய உபயோகப் பிரச்சனைகள்.

பெரும்பாலும் போன்களில் எனக்குப் பிடிக்காதது இந்தப் போன்களிலும்...

ஹாண்ட் செட் - அதாவது காதில் வைத்துக்கொள்ளும் ஸ்பீக்கர் - கள் இருந்தால் மட்டுமே எப்.எம் ரேடியோ கேட்க முடியும் என்ற கட்டாயத்தை இந்தப் போன்கள் விதிக்கின்றன. என்னத்தான் டெக்னிக்கலாக ஹாண்ட் செட்கள் ஆண்டெனாவாக உபயோகிக்கபடுகின்றன என்று புரிந்து கொண்டாலும், பயனர்கள் பார்வையில் இது எரிச்சல்.

*********

இந்த வருடத்தின் மத்தியில் வெளியிடப்பட இருக்கும், ஐ.போன் - ஐபாட் மூலம் பிரபலமான ஆப்பிள் கம்ப்யூட்டரின் படைப்பு. ஒட்டுமொத்த செல்போன் உலகையும் அதிசயமாகப் பார்க்க வைத்திருக்கும், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் போன் இது. 8 ஜி.பி மெமரியுடன், இதுவரை வந்திருக்கும் அனைத்து செல்பேசி தொழில்நுட்பங்களையும் உள்ளடக்கி 2007ன் மத்தியில் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் இந்த பேசியின் விலையும் அதிகமில்லை என்பதே இதன் எதிர்பார்ப்பிற்கு மற்றுமொரு காரணம். ஆண்டின் இறுதியில் உலகெங்கும் கிடைக்கும் என்று தெரிகிறது. http://www.apple.com/iphone/

"விகாஸ் சாப், நோக்கியா என்.73 நல்லாருக்கு. இன்னும் இந்த பழைய போனையே வச்சுகிட்டிருக்கீங்களே. எப்ப மாத்தப்போறீங்க?"

"அடுத்த வருசம் ஐ.போன் வந்தவுடனே ஒரேயடியா மாத்திக்கலாம்பா. "

"!!!!!!!!!"

கிசு.கிசு: ஐ.போன் என்பது ஏற்கனவே ஒரு ஆன்லைன் டெலிபோன் கம்பெனி உபயோகப்படுத்தும் பெயராம். ஆப்பிளின் அறிவிப்பு வந்த உடனேயே இதனை எதிர்த்து அந்த கம்பெனி கோர்ட்டிற்குப் போயிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
posted by சாகரன் @ 1/25/2007 11:31:00 PM   5 comments
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Last Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER